பான் கார்டு முக்கியம்.. இப்படியெல்லாம் மிஸ் யூஸ் பண்ணுவாங்க.. ரூ.10,000 ரெடியா வைங்க.. இதான் காரணம்
சென்னை: நீங்கள் பான் கார்டு பயன்படுத்துபவராக இருந்தால், சில தவறுகளை மறந்தும்கூட செய்துவிடக்கூடாது. அதற்கு அபராதம் விதிக்கப்பட்டுவிடும். அது என்னென்ன தவறுகள் தெரியுமா?
இந்திய குடிமகன் அனைவருக்குமே, அவசியமான ஆவணமாகிவிட்டது பான் கார்டுகள்.. அதிக வருமானம் பெறுபவர்கள் வருடந்தோறும், தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்..

தேவைகள்: குறிப்பாக, வருடத்துக்கு 2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். அப்படி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு அவசியம் தேவைப்படும்.. அனைத்து நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும், இந்த பான் கார்டுகள் தேவை. 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேலான தொகையை அனுப்புவதற்கு இந்த பான் கார்டுகள் தேவைப்படும்.
வங்கிக்கணக்கை ஒருவர் துவங்க வேண்டுமானாலும், பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமானாலும், டிமேட் கணக்குக்கும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற கார்டுகளை பெற வேண்டுமானாலும், பான் கார்டுகள் அவசியமாகிறது.
அபராதம்: பான் கார்டு விஷயத்தில் நீங்கள் தவறுகள் செய்தால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.. வருமான வரித்துறை உங்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதிக்கலாம். உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். எந்த தவறுகளுக்கெல்லாம் அபராதம் விதிக்கப்படுகிறது தெரியுமா?
ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம்.. அதனால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, இரண்டு பான் கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அந்தவகையில், வருமான வரித்துறை ரூ.10,000 வரை அபராதம் விதிக்கலாம்.
பான் கார்டு: அதேபோல, உங்களுடைய பான் கார்டில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக, உங்கள் பான் கார்டில் பிறந்த தேதி, பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் தவறாக எழுதப்பட்டிருந்தால் அதை திருத்திவிட வேண்டும்.
ஆனால், அதை திருத்துவதற்கு பதிலாக வேறு பான் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் அதற்கும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். இந்த தவறுக்கு 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்குமாம்..
குடும்ப பெயர்கள்: அதேபோல, பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் குடும்பப் பெயரை மாற்றுகிறார்கள். அதற்கு பிறகு அவர்கள் பான் கார்டையும் மாற்றி கொள்கிறார்கள். ஆனால், இதுவும் சட்டப்படி தவறாகும்..
குடும்பப்பெயர் மாறியிருந்தால் அல்லது பெயர், முகவரி, பிறந்த தேதி தொடர்பான மாற்றங்களை செய்ய விரும்பினால் பான் கார்டில் திருத்தம் மட்டுமே செய்து கொள்ளலாமே தவிர, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க கூடாது. அப்படி விண்ணப்பித்தால் உங்களிடம் 2 பான் கார்டுகள் இருப்பதாகக் கருதப்படும்.. அப்படி 2 கார்டுகள் என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
புகார்கள்: அதேபோல, உங்களின் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அது தொடர்பாக புகார் தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், நிதி இழப்பிற்கு ஆளாக நேரிடும்.. எனவே, வருமானத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, உங்கள் பான் கார்டு விவரங்களை பயன்படுத்தி, பான் கார்டு பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஏதேனும் மோசடி அல்லது சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்திருப்பதை கண்டால், உடனடியாக உங்கள் வங்கி அல்லது நிதி நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.. அல்லது வருமான வரித் துறையின் வாடிக்கையாளர் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் சொல்லலாம்..












Click it and Unblock the Notifications