ஓபிஎஸ்ஸுக்கு செக்.. ‘மாத்தி மாத்தி பேசுறாரு’ தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்தார் எடப்பாடி!
சென்னை : தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தனக்கு ஆதரவாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள இந்த பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 4 பேர்.. எடப்பாடி கோட்டையில் இருந்து சீட்டுகளை உருவ திட்டம்.. இறங்கிய 3 புள்ளிகள்- நடக்குமா?
மேலும், ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்றும் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் கிளம்பியுள்ள ஒற்றைத் தலைமை மோதலைத் தொடர்ந்து, வரும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவைக் கூட்டி ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றி எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவிக்கு வர திட்டமிட்டு வருகிறார். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் நிகழ்ந்து வரும் தற்போதைய குழப்பமான சூழல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஓபிஎஸ் கடிதம்
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம் தான் என்றும், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடத்த தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பதில் அறிக்கை
இதையடுத்து, ஓபிஎஸ்ஸின் அறிக்கைக்கு எதிராக பதில் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தயார் செய்து வந்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் தேர்தல் ஆணையத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பெரும்பாலான அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
நிலைப்பாட்டை மாற்றுகிறார் ஓபிஎஸ்
மேலும், பொதுக்குழு கூட்டப்படுவதில் சட்ட விதிகள் எதுவும் மீறப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களும் நிர்வாகிகளும் எனக்கு ஆதரவாக உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வை அங்கீகரிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
மேல்முறையீடு
இதற்கிடையே பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்துள்ளனர். குறிப்பாக பொதுக்குழு, செயற்குழு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை, பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் நம்பியிருக்கும் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என இரண்டிலும் தனது தரப்பை பலமாக எடுத்துரைக்க தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.