உதயமாகிறதா மக்கள் நலக் கூட்டணி 2.0? ராமதாஸ், தினகரன், கமல், ரஜினி, மு.க.அழகிரி கை கோர்க்கிறார்களா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் ஒரு மக்கள் நலக் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் புதிய கட்சிகளுக்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கின்றன.
திமுக கூட்டணியில் இம்முறை கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படாது என்பது தொடக்கம் முதலே சொல்லப்படுகிற செய்தி. இதனை கூட்டணி கட்சிகளும் ஏற்றுக் கொள்ளவே அதிக சாத்தியங்கள் உள்ளன.
அதிமுக- பாஜக
இன்னொரு பக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் அதிமுக அணியில் பாஜக மட்டுமே இடம்பெறக் கூடும் என்கிற நிலைதான் இருக்கிறது.
கை கோர்க்கும் ரஜினி- கமல்
அதேநேரத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ஆகியோரும் கட்சியை அறிவிக்க இருக்கிறார்கள் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தேவைப்பட்டால் ஈகோவை விட்டுவிட்டு ரஜினி கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.
ரஜினி- கமல்- பாமக
அதேபோல் பாமகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ரஜினிகாந்த் நீண்டகாலமாகவே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தற்போதைய நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்கிற நிலையில் அதிமுக அணியைவிட்டு விலகி ரஜினி பக்கம் பாமக தாவவும் வாய்ப்பிருக்கிறது.
அழகிரியின் கலைஞர் திமுக
மேலும் வரும் ஜனவரி 3-ந் தேதி மதுரையில் மு.க. அழகிரி தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனையின் முடிவில் கலைஞர் திமுக என்கிற கட்சியை அழகிரி அறிவிக்க வாய்ப்புள்ளது. அழகிரியைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வருகிறார். அதனால் ரஜினிகாந்த் கட்சியுடன் அழகிரி கட்சி நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்றே தெரிகிறது.
மநகூட்டணி 2.0?
அதாவது பாமக, ரஜினி கட்சி, கமல்ஹாசனின் மநீம, முக அழகிரி தொடங்க இருக்கும் கலைஞர் திமுக இணைந்து புதிய அணி உருவாகக் கூடும் என தெரிகிறது. இந்த கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதிமுக கூட்டணியில் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்த சிறிய கட்சிகளும் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2016 சட்டசபை தேர்தலில் 3-வது அணியாக மக்கள் நலக் கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கின. அதேபாணியில் 2021 சட்டசபை தேர்தலில் புதிய மக்கள் நலக் கூட்டணி 2.0 ஆகவாக இந்த கட்சிகள் இணைந்து நிற்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.