விவசாய சட்டங்களை எதிர்த்து.. மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியது வரலாற்று தருணம்.. கமல் பெருமிதம்
சென்னை: விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல், வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள் என ட்வீட் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு மத்திய அரசு புதிதாக 3 விவசாய சட்டங்களைக் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.
இருப்பினும், இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனிற்கு எதிராகவும் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் குத்தினர்.

விவசாயிகள் போராட்டம்
முதலில் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், அங்கு ரயில் மறியல் போராட்டங்களையும் செய்தனர். பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். அங்கு டிசம்பர் மாதம் நிலவிய கடும் குளிர் சமயத்திலும் சரி, மார்ச், ஏப்ரல் சமயத்தில் நிலவிய கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஓர் ஆண்டு
சுமார் ஓராண்டாக நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பலரும் உயிரிழந்தனர். குறிப்பாக, கடந்த ஜனவரி 26ஆம் தேதி நடந்த விவசாயிகள் போராட்டத்தில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் மிகப் பெரிய வன்முறை நடந்தது. அப்போதே விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அப்போதும் ஏற்பட்ட நெருக்கடியான சூழலையும் சமாளித்து போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர்.

பிரதமர் மோடி அறிவிப்பு
பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்களும் பலரும் விவசாய தலைவர்களும் வேளாண் சட்டம் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது எனத் தொடர்ந்து பேசி வந்தனர். இந்தச் சூழலில் நேற்று குரு நானக் ஜெய்ந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும், நாட்டு மக்களிடையே மன்னிப்பையும் அவர் கேட்டுக்கொண்டார்.

கமல் ட்வீட்
இதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். அதேபோல முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் ஆகியோரும் மத்திய அரசின் இந்த அறிவிப்பை வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் தனது ட்விட்டரில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.அறவழியில் போராடி வென்ற விவசாயிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.வேளாண் விரோதச் சட்டங்களை உறுதியாக எதிர்த்ததும்,மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியதும் பெருமைகொள்ளத்தக்க வரலாற்றுத் தருணங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications