காங்கிரஸ்? பாஜக? கமல் கட்சியின் Ex நிர்வாகிக்கு வரும் அழைப்புகள்! பொங்கலுக்கு பிறகு இணைப்பு வைபவம்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவரும், கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான முருகானந்தத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் அழைப்பு வருகிறதாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்ட முருகானந்தம், அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தோல்வியை தழுவினார்.
கமல்ஹாசனுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 மாதங்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய இவரை பாஜகவும், காங்கிரசும் தங்கள் பக்கம் அழைத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம்
திருச்சியை சேர்ந்த முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். பொறியாளர், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் ஆளுநர், தன்னம்பிக்கை பேச்சாளர் என பன்முகங்களை கொண்ட இவர், நூற்றுக்கணக்கானோருக்கு தனது நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு கொடுத்து வருகிறார். பொதுவாழ்க்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரோட்டரி சங்கங்கள் மூலம் திருச்சி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்.

கருத்து வேறுபாடு
மக்கள் நீதி மய்யத்தின் தலைமையகத்தில் பவர்ஃபுல் மனிதராக வலம் வந்த இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் களம் கண்டு தோல்வியை தழுவினார்.இதையடுத்து கமல்ஹாசனின் திட்டமிடாத செயல்பாடுகளும், கூட்டணியும் தான் கட்சியின் தோல்விக்கு காரணம் எனக் கூறி ம.நீ. ம.விலிருந்து வெளியேறி கமலுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

நண்பர்கள்
இவர் விலகிய தருணத்தில் சந்தோஷ்பாபு, மகேந்திரன், பத்மப்பிரியா, போன்றோரும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார்கள். இதில் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அகாடமியை சொந்தமாக ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், மகேந்திரன் திமுகவில் இணைந்து அக்கட்சியின் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மகேந்திரன் அளவுக்கு முருகானந்ததுக்கு திமுகவில் வரவேற்பும் இல்லை அழைப்பும் இல்லை.

தேசியக்கட்சி
இதனிடையே முருகானந்தம் வளமானவர் என்பதால் அவரது வருகையால் கட்சிக்கு ஆதாயம் கிடைக்கும் என நம்பும் பாஜகவும், காங்கிரசும் அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இவர் ஐக்கியமாககூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே நமக்கு கிடைத்த இந்த தகவல் குறித்து முருகானந்தத்திடமே பேசிய போது, தேசியக் கட்சி ஒன்றில் நான் இணைவது உறுதி, பொங்கலுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்பதோடு முடித்துக்கொண்டார்.

மக்களவை தேர்தல்
இதனிடையே வரும் 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வாய்ப்பு வேண்டும் என்ற டிமாண்டை முருகானந்தம் முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் மேலிடத்திலிருந்து என்ன ரியாக்ஷன் வரப்போகிறது எனத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications