அரசு மருத்துவமனைக்குத் வரும் மக்கள்.. காப்பாற்றிய சூப்பர் திட்டம்.. திட்டக்குழு வெளியிட்ட ரிப்போர்ட்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த சிறப்பான திட்டம்தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம். இத்திட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது.
இதுவரை தமிழ்நாடு அரசு இதற்காகச் சிறப்பு நிதியாக சுமார் 681.84 கோடியை ஒதுக்கீடு செய்து, அதில் கடந்த ஜனவரி வரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிவைத்தார். கடந்த டிசம்பர் மாத புள்ளிவிவர கணக்குப்படி ஒரு கோடி பேர் இதனால் பயன்பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கடமகுட்டை, தேன்கனிக் கோட்டை, சென்னை, உதகை எனப் பல ஊர்களில் இத்திட்டத்தினால் எத்தனைப் பேர் பயனடைந்துள்ளனர் என்பது பற்றிய நேரடி கட்டுரைகளை நாம் முன்பே எழுதி இருக்கிறோம்.

'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற தமிழ்நாடு அரசின் திட்டம் மக்களிடம் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிவதற்குப் பெரிய அளவில் உதவியுள்ளதாகத் திட்டக் குழு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் திட்டக்குழுவானது 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் பற்றி ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தில் சர்வே செய்துள்ளது. அந்த ஆய்வில் 6,503 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த ஆய்வின்மூலம் பொதுமக்களிடையே உள்ள நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதற்கு இத்திட்டம் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளது என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கான தரவுகளைச் சேகரிக்கும் நடவடிக்கை கடந்த மார்ச் 27 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு Epicollect5 என்ற தொழில்நுட்ப பயன்பாடு மூலம் செய்யப்பட்டுள்ளது. இந்த Epicollect5 என்பது Free and easy-to-use mobile data-gathering platform. ஆய்வுத் தரவுகளை இந்த இலவச தகவல் சேகரிப்பு ப்ளாட்ஃபார்ம் மூலம் அரசு எடுத்துள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த சர்வே மூலம் பொதுமக்களிடம் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய இத்திட்டம் உதவி செய்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
மேலும் இத்திட்டம் ஆரம்ப சிகிச்சை மற்றும் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற உதவியுள்ளது என்பதையும் இந்தக் குழு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
உதாரணமாகச் சொன்னால், இக்குழு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 6,503 பேரில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4,793 பேர், அதாவது 73.7% பேர் நீரிழிவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்பச்சுகாதார அறிக்கையானது சுட்டிக் காட்டி இருக்கிறது.

இவர்களில், 3,433 நபர்கள், அதாவது 71% பேர் நீரிழிவு நோய் கண்டறியும் திட்டத்தின் கீழாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வு படம்பிடித்துக் காட்டியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் களப் பார்வையின் போது சுமார் 2,383 பேர் திரையிடல் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளனர். மேலும் 1,050 பேர் இந்தத் திட்டத்தின் கீழுள்ள வேறு சில நிறுவனங்கள் மூலம் திரையிடப்பட்டனர்.
இந்த ஸ்கிரீனிங் மற்றும் மதிப்பீட்டுக்குப் பிறகு, 1,325 பேர் நீரிழிவு நோயாளிகள் என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 765 பேர், அதாவது 57.7% பேர் மக்களைத் தேடி மருத்துவம் என்ற இத்திட்டத்தின் மூலமே நோயாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இவ்வாறு முன்கூட்டியே நோயினைக் கண்டறிந்ததால் இப்போது அவர்களில் 54.03% பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முறையாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
மேலும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் இந்த நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதை உணர்ந்த பொதுமக்களில் பலர் தனியார் மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு மாறி வந்துள்ளனர் என்பதையும் திட்டக்குழு ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
கணக்கெடுப்பின் நோக்கங்கள் என்ன?
ஒரு பெண் சுகாதார தன்னார்வலர் கடந்த ஓராண்டில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்குப் பரிசோதிக்கப்பட்டுள்ள பயனாளிகளின் சதவிகிதம் எவ்வளவு? நீரிழிவு நோயாளி அல்லது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இடையே சிகிச்சை பெற்றவர்கள் சதவிகிதம் எவ்வளவு? அதில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளவர்கள் எத்தனை சதவிகிதம்? இவைபோன்ற விவரங்களைக் கண்டறிவதே இந்தக் கணக்கெடுப்பின் குறிக்கோளாகும்.
இப்படிச் சேகரிக்கப்படும் தரவுகளில் மூலம் நீரிழிவு நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளிடையே, நோயின் கட்டுப்பாட்டு விகிதம் எப்படி உள்ளது? சிகிச்சை எந்தளவுக்குப் பயனளித்து உள்ளது போன்ற தரவுகளைச் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகள் சேகரிப்பு நடவடிக்கை கடந்த மார்ச் 27 அன்று தொடங்கியது.
மாதிரிகளை எடுக்க multi-stage cluster sampling method தொழில்நுட்ப முறையானது பயன்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக 8,814 குடும்பங்களை அணுகியுள்ளனர். அதில் இந்தக் குடும்பங்களிலுள்ள தகுதியான சுமார் 6,590 பேர் பங்கேற்றுள்ளனர்.

இவர்களில், 6,503 பங்கேற்பாளர்கள் மட்டுமே நேர்காணல் செய்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். முன்பே குறிப்பிட்டதைப்போல் இந்த ஆய்வுக்கான தரவுகள் அனைத்தும் Epicollect5 பயன்பாட்டு மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை முதல்வர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "#HealthcareAtDoorstep எனும் நோக்கத்துடன் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கினோம். ஆனால், தொடக்கத்திலேயே நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கவும் அது வழிவகுக்கிறதென மாநிலத் திட்டக்குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மக்களை நாடிச் செல்லும் அரசு மட்டுமல்ல, வருமுன் காக்கும் அரசு" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications