உதயநிதி ஸ்டாலினுக்கு மலேசிய அரசு அழைப்பு! விளையாட்டுத் துறை கட்டமைப்பை நேரில் பார்க்க வாங்க!
சென்னை: மலேசியாவின் விளையாட்டுத் துறை கட்டமைப்பை நேரில் பார்வையிட வருமாறு அந்நாட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவரது அழைப்பை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓரிரு மாதங்களில் அரசு முறை பயணமாக மலேசியா புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் திருநாளில் சிறப்பு விருந்தினராக மலேசிய அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் உதயநிதி
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். விளையாட்டுத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள அவர் அது சார்ந்த அனைத்து பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார். இந்தியளவில் தமிழகத்தை விளையாட்டுத்துறையில் நம்பர் 1 ஆக்குவதற்கான இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

மலேசியா அழைப்பு
இந்தச் சூழலில் அயலகத் தமிழர் திருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார் வரதரஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மலேசியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் விளையாட்டுத்துறை கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை நேரில் பார்க்குமாறு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சராகிய பிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு வந்துள்ள முதல் வெளிநாட்டு அழைப்பு மலேசியாவில் இருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி பயணம்
மலேசிய அரசின் அழைப்பை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓரிரு மாதங்களில் அரசு முறை பயணமாக மலேசியா புறப்பட்டுச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வரும் மே மாதத்துக்கு பிறகு விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பாக வெளிநாடுகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை அமைச்சராவதற்கு முன்பு திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் சந்திப்பு
இதனிடையே மலேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார் வரதராஜன் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சந்தித்து பேசினார். அதுமட்டுமல்லாமல் முதல்வருடன் மலேசிய அமைச்சர் காலை சிற்றூண்டியும் சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications