ஆகஸ்ட் 4ஆம்தேதி டெல்லிக்கு வாங்க! தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேருக்கு கார்கே அழைப்பு!
சென்னை: தமிழகத்தில் பாஜக பாய்ச்சல் காட்டி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் 8 பேரை ஆகஸ்ட் 4ஆம் தேதி டெல்லிக்கு அழைத்து விரிவான ஆலோசனை நடத்தவுள்ளார் மல்லிகார்ஜுனே கார்கே.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை பாஜக முழு வீச்சில் தொடங்கி பாதயாத்திரை நடத்தி வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியில் என்ன பணிகள் தொடங்கவேண்டும் எப்படி மக்களை அணுக வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அடுத்து யாரை நியமிக்கலாம் என்பது குறித்து கார்கே கருத்துக் கேட்கவுள்ளார். இதற்காக கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி (அன்புமணியின் மாமனார்), உள்ளிட்ட 8 காங்கிரஸ் பிரமுகர்கள் வரும் வாரம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், திமுகவுடனான கூட்டணி, வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகள் குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்கேவுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபாலும் இந்த ஆலோசனையில் பங்கேற்கவுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு பிறகு தான் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம் குறித்த உறுதியான தகவல் வெளியாகக்கூடும். இதனிடையே அமித்ஷாவின் தமிழக வருகை மற்றும் பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக ராகுல் அல்லது ப்ரியங்கா காந்தியை வைத்து தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications