30 குண்டுகள் முழங்க மரியாதை.. கொரோனாவால் இறந்த மாம்பலம் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடல் நல்லடக்கம்
சென்னை: கொரோனா தொற்றால் உயிரிழந்த மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடலுக்கு 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை கொடுக்கப்பட்டது.
மருத்துவ ஊழியர்களை போலவே காவல்துறையினரும் முன்கள பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில்தான் மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று, உயிரிழந்தார். முன்பு அவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆகும்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த முதல் போலீஸ் அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இதுவரை சுமார் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 250 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பாலமுரளி நோயின் காரணமாக பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலமுரளி குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவர், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், உயிரிழந்த பாலமுரளியின் உடலுக்கு நேற்று இரவு, 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல்துறை அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பாலமுரளி உடல் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி, காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து சென்றன. கண்ணம்மாபேட்டை மயானத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி பாலமுரளியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து இன்று, அவர் உருவப் படத்திற்கு, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உள்ளிட்ட உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications