கூட்டுப்பட்டா நிலம் வாங்க போறீங்களா.. சென்னையில் நடந்த சம்பவம் தெரியுமா? கிராம கணக்கு முக்கியம்
சென்னை: கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்தை வாங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று ரியல் எஸ்டேட் பணிகளில் உள்ள பலரும் அறிவுறுத்தி வருகிறார்கள். கூட்டுப்பட்டாவை பொறுத்தவரை பழைய பட்டாவை மாற்றாமல் இருந்தால் போலி ஆவணங்கள் மூலம் குடும்பத்தினரே பட்டாவை வைத்து செட்டில்மெண்ட் ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் சென்னை புறநகர் பகுதியில் சுமார் 1.50 கோடி நிலம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.. எப்படி என்பதை பார்ப்போம்.
கூட்டுப்பட்டா என்றால் என்றால் என்ன: ஒரு நிலம் சர்வே நெம்பர் 1081 என்று வைத்துக் கொள்வோம்.. அவருக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த 10 பேரில் ஒருவர் நீங்கள் என்று வைத்துக் கொள்வோம்..உங்கள் எல்லாருக்கும் சேர்ந்து அந்த நிலம் இருக்கும். அது தான் சர்வே நம்பர் 1081ல் வருவாய்த்துறை பதிவேடுகளில் எல்லோருடைய பெயரும் மொத்தமாக குறிக்கப் பட்டிருக்கும். இதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் பட்டா கேட்டால் அந்த சர்வே நெம்பரில் எல்லோர் பெயரும் போட்டு வழங்கப்படும். அந்த ஆவணத்திற்கு கூட்டுப் பட்டா (Joint patta ) என்று பெயர் ஆகும். யார் யாருக்கு எவ்வளவு நிலம் பாத்தியம் என்று தெரியாது. 10 பேருக்கும் உரிமை உள்ளது என்று பதிவாகி இருக்கும்.

அந்த நிலத்தை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பிரித்து கொள்ளலாம். ஆனால் அப்படி பிரிக்கப்பட்ட நிலத்திற்கு பட்டா பெற வேண்டும் என்றால், எல்லாரும் சேர்ந்து கையெழுத்து போட வேண்டும். யாருக்கு என்ன அளவு என்று துணை சர்வே நம்பர் போட்டு தனிப்பட்டாவை வழங்குவார்கள். அதேநேரம் தனிப்பட்டா வாங்கும் போதே சரியாக நிலத்தை அளந்து பார்த்து அதன் பின், பூமியில் நிலத்தை விற்பனை செய்பவரின் உண்மையான சொத்தில் அளவை சரி பார்த்து வாங்க வேண்டியது அவசியம் ஆகும். விற்பவரின் கிரய பத்திரத்தில் ஒரு அளவு, உண்மையான சொத்தில் ஒரு அளவு இருந்தால் , நீங்கள் உண்மையான சொத்து அளவை தான் விலைக்கு வாங்க வேண்டும், அதை தான் புதிய கிரய பத்திரத்தில் குறிக்கப்பட வேண்டும்.
பூமியில் இல்லாத நிலத்தை பத்திரத்தில் குறிப்பிட்டால், பட்டா வாங்கும் போது பக்கத்து நிலத்துக்காரரிடம் போய் சண்டைக்கு போகும் நிலை ஏற்படும். எனவே செக்கு பந்தி என்ற நிலத்தின் எல்லை பவுண்டரிஸை சரி பார்க்காமல் பழைய பத்திரத்தில் உள்ளதையே புதிய பத்திரத்தில் குறிப்பிட்டு வாங்கக்கூடாது. அடுத்ததாக இன்னொரு பிரச்சனையும் கூட்டுப்பட்டாவில் இருக்கிறது. கூட்டுப்பட்டாவில் உள்ள நிலத்தை தனியாக பிரித்து பட்டா வாங்கிய பின்னர் அந்த நிலத்தை வாங்குவது நல்லது. இல்லை குறிப்பிட்ட சிலருக்கும் மட்டும் இதுபாத்தியம் என்று பத்திரப்பதிவு மட்டும் செய்திருப்பார்கள். ஆனால் பட்டா வாங்கியிருக்க மாட்டார்கள். அதை அப்படியே வேறு ஒருவருக்கும் விற்றிருப்பார்கள்.. அதை நீங்கள் வாங்கினால் பட்டா வாங்குவதற்கு படாதபாடு பட வேண்டியதிருக்கும். எனவே பட்டாவை உடனே வாங்குவது நல்லது. அதேநேரம் கூட்டுப்பட்டா நிலத்தை பொறுத்தவரை என்ன தான் பத்திரம் உங்கள் பெயரில் இருந்தாலும், பட்டாவில் பெயர் உள்ளவர்கள் போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யவும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் சென்னை அருகே நடந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் குப்பன் என்பவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் 12 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை அவரது வாரிசுகளான ரத்தினம், போத்தையன், சின்னதுரை, ராஜு, கோவிந்தம்மாள் ஆகியோர் சரிசமமாக பிரித்து அனுபவித்து வந்தனர். இதில் ரத்தினம் என்பவருக்கு கிடைத்த 74 சென்ட் நிலத்தை அவரது மகன் ராமநாதன்(வயது 57) என்பவருக்கு அவரது குடும்பத்தினர் கிரையம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
இந்தநிலையில் சின்னதுரையின் மகனான மீஞ்சூர் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பவுல்சங்கர் (53) என்பவர் கிராம கணக்கில் தனது தந்தை பெயரில் இருந்த பட்டா மூலம் தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து போலி ஆவணம் தயாரித்து ராமநாதனுக்கு பிரித்து கொடுத்த நிலம் மற்றும் பிரிக்கப்படாத சொத்து உள்பட மொத்தம் உள்ள 3 ஏக்கர் 12 சென்ட் நிலத்தையும் தனது மனைவி மோகனா பெயருக்கு செட்டில்மெண்ட் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ராமநாதன் அளித்த புகாரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுல்சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம் ஆகும்.












Click it and Unblock the Notifications