“குல்லா” ஒரு கேடா? வடமாநிலம்போல் சென்னையில்.. முஸ்லிம் சிறுவன் மீது தாக்குதல் - மதவெறியர் கைது
சென்னை: குல்லா அணிந்த காரணத்துக்காக 8 ஆம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் சிறுவனை தாக்கிய நபரை ஒரு நாள் தேடுதல் வேட்டைக்கு பின்னர் காவல்துறை கைது செய்து இருக்கிறது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சிறுவன் முஹம்மது இக்லாஸ். 8 ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ரங்கராஜபுரத்தில் உள்ள ரஹீமா மசூதியில் குர்ஆன் மனனம் செய்து வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு 8 மணியளவில் மசூதியில் இருந்து சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் முஹம்மது இக்லாஸ். அப்போது அவரை வழிமறித்த நபர் குல்லா ஒரு கேடா என்று கூறி தாக்கியதாக கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சி
இது தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சியில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுவனின் சைக்கிளை இடிப்பது போல் வருகிறார். அப்போது வரை நோக்கி கோபமாக ஏதோ கத்தி அதட்டுவது பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவன் இக்லாஸ் தனது பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார்.

காவல் நிலையத்தில் புகார்
ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் உள்ள மக்களிடம் தெரிவித்துள்ளனர். உடனே அனைவரும் சென்னை அசோக் நகர் காவல்நிலையத்துக்கு சென்று நடந்த விபரத்தை தெரிவித்து புகாரளித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது செய்ய கோரிக்கை
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சிறுவனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.

தாக்கியவர் கைது
இந்த நிலையில் சிறுவனை தாக்கிய நபரை இன்று அசோக் நகர் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அவர் மீது இரு தரப்பிடையே மோதலை தூண்டும் வகையில் செயல்பட்டதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சிறுவனை தாக்கியவரை துரிதமாக கைது செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாக பெற்றோர் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை தலைமையிலான அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களின் குழு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications