செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் மாநிலத் தலைமையில் மாற்றம் செய்ய அக்கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்யவிருக்கும் சூழலில், அதிரடியாக செயல்படக் கூடிய மாணிக்கம் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைமை பொறுப்புக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் உள்ள தங்களின் மாநிலத் தலைமைகளை மாற்றி, புதிய உத்வேகத்துடன் கட்சியை வழிநடத்தத் திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் கே. செல்வப்பெருந்தகை, இன்னும் சில வாரங்களில் தனது பதவியைத் துறக்க உள்ளதாக சத்தியமூர்த்தி பவனில் பேச்சுகள் எழுந்துள்ளது.

ஏற்கனவே சட்டசபைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று செல்வப்பெருந்தகை கூறி இருந்தார். தற்போது தனது மகள் திருமணத்திற்கு பின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக முடிவு எடுத்துள்ளார். சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மற்றும் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு ஏற்ப, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது.
இதன் காரணமாக, அகில இந்தியத் தலைமை நாடு முழுவதற்கும் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்து வரும் நிலையில், தமிழகத்திற்கும் புதிய முகத்தைக் கொண்டு வர அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது.
செல்வப்பெருந்தகைக்கு மாற்றாக, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூரை தலைவராகக் கொண்டு வர டெல்லி தலைமை தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய வட்டாரத்தில் இருக்கும் இவர், டெல்லி மற்றும் பிற மாநில அரசியல் நிலவரங்களை நன்கு அறிந்தவர்.
தமிழகத்தில் தவெக மற்றும் பிற கட்சிகளுடன் காங்கிரஸ் காட்டி வரும் நெருக்கமான அரசியல் சூழலில், டெல்லி தலைமையுடன் நேரடியாகப் பேசக்கூடிய ஒரு ஆளுமை தமிழகத்திற்குத் தேவைப்படுகிறது. இதனால் மாணிக்கம் தாகூர் எப்போதுமே சமூக ஊடகங்களிலும், களத்திலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்படக்கூடியவர்.
இளைஞர்களைக் கவர்ந்து கட்சியை வளர்க்க இவரே தகுதியானவர் என டெல்லி கருதுகிறது. தவெக மற்றும் காங்கிரஸ் இடையேயான புதிய அரசியல் நகர்வுகள் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்தச் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ்-க்கு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications