அதிகாரத் திமிர் இருந்தால் அமைதியாக இருக்க மாட்டோம்! திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
சென்னை: மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட வேண்டும் என கார்கேவிடம் நான் கோரிக்கை வைப்பேன் என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி தெரிவித்துள்ளார்.
மதுரையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசிய திமுக நிர்வாகிக்கு அவர் பதிலளித்துள்ளார். மேலும் அதிகாரத் திமிர் என்ற வார்த்தையையும் பயன்படுத்தியுள்ளார். இதனால் திமுக- காங்கிரஸ் இடையே மோதல் வலுப்படும் என்றே தெரிகிறது.

இண்டியா கூட்டணிக்கு திமுகவின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாகவும் விமர்சித்தும் திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ. தளபதி பேசியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகியோர்தான் காரணம்" என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.
தவெக
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், "எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு தரப்படும்" என்று அண்மையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் புதியதொரு போக்கைத் தோற்றுவித்தது. இதுவரை ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்காத நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆட்சியில் பங்கீடு
விஜய்யின் ஆட்சிப் பங்கீடு என்ற கருத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளையும், ஆட்சிப் பங்கையும் கேட்டு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினர். குறிப்பாக, விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆட்சிப் பங்கீடு குறித்து வெளிப்படையாகப் பேசி வந்ததோடு, இக்கோரிக்கையை கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
இந்த நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்தது திமுக கூட்டணியில் ஒருவித புகைச்சலை உண்டாக்கியது. இதையடுத்து, டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணி குறித்த வெளிப்படையான கருத்துகளைத் தவிர்க்குமாறு மேலிடம் அறிவுறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
காங்கிரஸ் நிர்வாகிகள்
இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக காங்கிரஸ் நிர்வாகிகளின் எதிர்ப்பு குரல்கள் சற்று அடங்கியுள்ளன. இந்தச் சூழ்நிலையில்தான், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று இரவு திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஜோதிமணி, மாணிக்கம் தாகூர்
கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரைச் சொல்ல எனக்கு என்ன பயமா? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரைத்தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். இந்தத் தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள்.
பங்கு வேண்டுமாம்
அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். இவையெல்லாம் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக் கூடாது.
இந்தியா கூட்டணி
திமுக உணர்வுபூர்வமாக இந்தியா கூட்டணியில் இருக்கிறது. இக்கூட்டணியைக் காப்பாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மமதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூன்று பேர்தான் காரணம்.
3000 அல்லது 4000 வாக்குகள்
மேலும் பல விஷயங்களைச் சொன்னால் அது தவறாகப் போய்விடும் என்பதால் வெளிப்படையாகப் பேச விரும்பவில்லை . ஒரு தொகுதிக்கு 3000 அல்லது 4000 வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும், வார்டுகளில் பூத் கமிட்டி அமைக்க ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். அவர்கள் இந்த அளவுக்குப் பேசுகிறார்கள் என்பதுதான் நம் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது" என தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூர் பதிலடி
திமுக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்து மாணிக்கம் தாகூர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கேவிடம் கோரிக்கை வைப்பேன்.
அதிகாரத் திமிர்
தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications