ஆடிட்டர் குருமூர்த்தியை வீடு தேடிச் சென்று சந்தித்த மணிப்பூர் ஆளுநர்; பின்னணி என்ன?
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது வீடு தேடிச் சென்று மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் சந்தித்து பேசியிருக்கிறார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பின் அடிப்படையில் நடைபெற்ற ஒன்று எனவும் காரணம் தெரிவிக்கப்படுகிறது.
மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் பொறுப்பேற்ற பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திப்பது இதுவே முதல்முறை எனத் தெரிகிறது.

துக்ளக் ஆசிரியர்
துக்ளக் இதழின் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்திக்கு பாஜகவின் மேல்மட்டத் தலைவர்களோடு நல்ல நட்பு இருக்கிறது. நினைத்த நேரத்தில் அமித்ஷாவிடம் நேரடியாக பேசக்கூடிய இடத்தில் உள்ள அவர், பாஜகவின் அட்வைஸராகவும் இருந்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவுக்கு சிறிது காலம் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். பிறகு ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வரும் பணியை முன்னெடுத்த அவர் தற்போது அரசியல் நோக்கராக மட்டும் இருந்து வருகிறார்.

அரசியல் நிலவரம்
எனினும் தமிழகத்தின் அரசியல் நிலவரம், திமுகவின் செயல்பாடுகள், அதிமுகவின் அடுத்த நிலை குறித்தெல்லாம் டெல்லியின் கவனத்துக்கு அவ்வப்போது கொண்டு செல்கிறார். இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான இல.கணேசன் ஆடிட்டர் குருமூர்த்தியை அவரது வீட்டில் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

என்ன பேச்சு
மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கனேசனும் ஆடிட்டர் குருமூர்த்தியும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டதோடு பழைய நினைவலைகள் சிலவற்றை பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக பாஜகவின் இன்றைய நிலை, அண்ணாமலையின் செயல்பாடுகள் குறித்தெல்லாம் மனம்விட்டு பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக குறித்தும், மணிப்பூர் மாநில அரசியல் நிலவரம் குறித்தும் அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதாக தெரிகிறது.

போலீஸ் பாதுகாப்பு
இதனிடையே மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனின் பயண நிகழ்ச்சி இன்று காலை காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குருமூர்த்தியின் இல்லம் அமைந்துள்ள சென்னை மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் வீதியில் பாதை கிளியர் செய்யப்பட்டது. ஆளுநரின் கான்வாய் வாகங்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அங்கு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications