மணிப்பூர் பெண்கள் மானபங்கம்: தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் ஆக்ரோஷ போராட்டம்!
சென்னை: மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 3 மாதங்களாக மோதல்கள் நீடித்து வருகிறது. இம்மோதல்களில் குக்கி இன மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது அம்பலமாகி வருகிறது. மணிப்பூரில் குக்கி இன பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்டு மைத்தேயி இன கும்பலால் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ உலகின் மனசாட்சியை உறைய வைத்துக் கொண்டிருக்கிறது.

மணிப்பூரில் நிகழ்ந்து வரும் இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குக்கிராமங்களிலும் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மணிப்பூர் படுகொலைகள்: இந்நிலையில் மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து திமுக எம்பி கனிமொழி தலைமையில் சென்னையில் நேற்று திமுக மகளிரணியினர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளக தமிழ்நாடு முழுவதும் திமுக மகளிரணியினர் போராட்டங்களை நடத்த உள்ளனர்.

இது தொடர்பாக திமுக மகளிரணி வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய நிலையில், சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட, மனிதாபிமானமற்ற கொடுமை நிகழ்ந்ததாக, ஊடகச் செய்திகள் தற்போது வெளிவந்துள்ளது. அனைவரின் உள்ளத்தையும் பதற வைத்துள்ளது. தாய்மையை அவமானப்படுத்தும் இந்நிகழ்வுகளை மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசு தடுக்கத் தவறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இக்கலவரங்கள் நிகழ்ந்த நேரத்தில் அதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு வந்தார். மத்திய பா.ஜ.க. அரசும் மகளிருக்கெதிரான இக்கொடுமைகளைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியது. இதனைக் கண்டித்து 24.07.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக மகளிரணியினர், மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். கறுப்பு உடைகளை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான திமுக மகளிர் அணியினர் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications