“ஜெயலலிதா ஆவி தான் என்னை திமுகவிற்கு போகச் சொன்னது..எடப்பாடிக்கு நன்றி” அலற விட்ட மனோஜ் பாண்டியன்!
சென்னை: ஜெயலலிதாவின் ஆவி தான் என்னை திமுகவுக்கு அனுப்பியது என அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் பேசியுள்ளார். திமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் மனோஜ் பாண்டியன்.
"ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்" என்கிற தலைப்பில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் நெல்லை மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா. ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, சமீபத்தில் ஓபிஎஸ் அணியிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மனோஜ் பாண்டியன், “கொள்கை இல்லாத கூட்டணியில் இருந்து கொள்கை கூட்டணிக்கு என்னை அனுப்பி வைத்தது எடப்பாடி பழனிசாமி தான். அதிமுகவை எடப்பாடி டெல்லிக்கு அடகு வைத்துவிட்டு ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்த முடியாத சூழ்நிலையில் கட்சியை நடத்தி வருகிறார்.
ஜெயலலிதா ஆவி என்னை திமுகவிற்கு துரத்தி விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். ஜெயலலிதாவின் ஆவி தான் என்னை திமுகவுக்கு அனுப்பியது. காரணம், கொள்ளைக் கூட்டம் எடப்பாடிக்கு கொடநாடு என்றாலே பயம்.
கொள்கை இல்லாமல் திராவிட கட்சிகள் இல்லை என்னை திமுக என்னும் தாய் கழகத்திற்கு அனுப்பி வைத்த பெருமை எடப்பாடியையே சேரும். அங்கே டெல்லியை எதிர்த்து ஒரு கட்சி போராடிக் கொண்டிருக்கிறது அவர்களிடம் போய் சேருங்கள் என என்னை போகச் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி.
ஒரு எம்எல்ஏவாக கூட ஆக முடியாமல் சட்டம் துரத்தித் துரத்தி அடிக்கும். கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி சிக்குவார். கோடநாடு கொலை வழக்கு நடந்த போது அங்கு இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் மின்சாரம் அனைத்தும் அணைக்கப்பட்டு இருந்தது. அது குறித்து வழக்கு நடத்தாதது ஏன்? அங்கு இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ன செய்தார்?
நான் சட்டமன்ற உறுப்பினராக ஆலங்குளத்தில் இருந்போது ஆலங்குளத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் குறிப்பாக அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி செய்து கொடுத்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதிமுக என்பது தொண்டர்கள் இல்லாமல் இருக்கும் டெண்டர் கட்சி” எனவும் விளாசினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ ஆகச் செயல்பட்டவர் மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்தார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஒருங்கிணைப்புக்கான முயற்சிகள் கைகூடாத நிலையில் அதிருப்தியில் இருந்த மனோஜ் பாண்டியன், திமுகவில் இணைந்தார். தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த நவம்பர் மாதம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications