"மனுஸ்மிருதிக்கு எழுத்து வடிவமே கிடையாது" திருமாவளவன் வீடியோவால் கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!
சென்னை: மத நம்பிக்கைகளை, உணர்வுகளை புண்படுத்தும் திருமாவளவன் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
தமிழக வரலாற்றில் மனுஸ்மிருதிக்கு எதிராக திராவிட இயக்கங்கள் தொடர்ந்து போராடி வந்துள்ளன. அந்தப் போராட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அண்மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மனுஸ்மிருதியில் உள்ள கருத்துக்களை பேசியதை சர்ச்சையாக மாற்றப்பட்டது. குறிப்பாக ஆ.ராசா பெண்களை தவறாக பேசியதாக பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

மனுஸ்மிருதி சர்ச்சை
ஆனால் ஆ.ராசா, இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான், நீ பஞ்சமன்தான். இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவன் தான். சூத்திரன் என்றால் விபச்சாரியின் மகன் என்று இந்து மதம் சொல்கிறது. அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் விபச்சாரி மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மனுஸ்மிருதியில் இடம்பெற்ற கருத்துக்களை பேசியதற்கு பாஜக தரப்பில் கண்டன போராட்டம் நடத்தப்பட்டது.

ஒரு லட்சம் பிரதிகள் விநியோகம்
இந்த நிலையில் நவம்பர் 6ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆர்எஸ்எஸ்-ன் அரசியல் கொள்கை அறிக்கை தான் மனுஸ்மிருதி என்ற அடிப்படையில் முன்னுரை எழுதியுள்ளேன். அந்த முன்னுரையுடன் சூத்திரர்கள், பெண்கள் பற்றி மனுஸ்மிருதி என்ன சொல்கிறது என்பதை மட்டும் தொகுத்துள்ளோம்.

திருமாவளவன் வீடியோ
32 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை விலையில்லாமல் மக்களுக்கு விநியோகம் செய்ய இருக்கிறோம். இதனால் விசிக மாவட்ட பொறுப்பாளர்கள் மனுஸ்மிருதி புத்தகங்களை நவ.3ம் தேதி எடுத்து செல்லலாம். நாம் சந்தித்து வரும் சமூக கட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த புத்தகம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மோசடி வேலை
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், அப்பட்டமான மோசடி வேலை. மநுஸ்மிருதிக்கு எழுத்து வடிவமே கிடையாது. ஹிந்துக்களை, ஹிந்து பெண்களை அவதூறு செய்து, இல்லாத சாதி பாகுபாட்டை இருப்பதாக சொல்லி ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு கிருஸ்துவ மதமாற்ற, அந்நிய தீய சக்திகளிடம் கையேந்தி விலை போனவர்களின் வெற்று கூச்சலே இது.

மத உணர்வை புண்படுத்துகிறார்
மத நம்பிக்கைகளை, உணர்வுகளை புண்படுத்தும் தொல்.திருமாவளவன் மீது தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொல். திருமாவளவனை கண்டிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications