அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் குவிந்த புகார்கள்! விசாரிக்க முடிவு
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது இ-மெயிலில் புகார்கள் குவிந்துள்ளது இது குறித்து அரசு அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரித்து வருகிறார். புகார்கள் உண்மையாக இருந்து ஆதாரங்கள் இருந்தால் சூரப்பாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், அண்ணா பல்லைக்கழகத்திற்கு உயர் அந்தஸ்து வேண்டும் என்றும், மாநில அரசின் தயவு தேவையில்லை என்று கூறியிருந்தார்,. அந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது.
இதனிடையே . அண்ணா பல்கலையில் நடந்த ஆன்லைன் தேர்வை தனியார் நிறுவனம் மூலம் நடத்தி பணம் மோசடி செய்தது, ரூபாய் 700 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மேலும் முறைகேடான பணி நியமனங்கள் நடந்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், ஐஐடியில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டதும் சர்ச்சையாகியதைத் தொடர்ந்து சூரப்பா மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

விசாரணைக்குழு
இதையடுத்து, தமிழக அரசு சூரப்பா மீதான புகார்களை ஆராய்வதற்கான ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை குழு அமைத்தது. இந்த குழு கடந்த நவ.11ம் தேதி அமைக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் சூரப்பா மீதான புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொலைப்பேசி எண்
இந்நிலையில், நீதிபதி கலையரசன் துணைவேந்தர் சூரப்பா மீது ஆதாரங்களுடன் புகார் அளிக்கலாம் என்று அறிவித்திருந்தார். இதற்காக [email protected] என்ற இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி மூலம் ஏராளமானவர்கள் புகார் அளித்தனர். அதேபோன்று, பல்கலைக்கழக ஊழியர்களும் புகார் அளித்துள்ளார்கள்.

விசாரிக்க முடிவு
சூரப்பா மீது ரூபாய் 280 கோடி மோசடி புகார் கூறப்பட்டுள்ளதாம். இது தொடர்பாக நிதி அலுவலர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாம். முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எழுத்துப்பூர்வம்
இதனிடையே நீதிபதி கலையரசன் சூரப்பா மீது புகார் அளிப்பவர்கள் நேரில் வந்து எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் கூறியிருந்தார். அதன்படி புகார் அளிப்பவர்கள் இன்று முதல் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம். புகார் அளித்தவர்களிடம் அடுத்த வாரம் முதல் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications