18 மாதங்களில் மதுரை டைடல் பார்க்.. தயார் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்கள்.. அதிரடி காட்டும் பிடிஆர்!
சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்த்த பின்னரே மதுரையில் டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 16ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற பெயரில் தென்மண்டல மாநாடு தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிகையில், மதுரை மாட்டுத்தாவணியில் 'டைடல் பார்க்' அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக அமைக்கப்பட்ட உள்ள டைடல் பார்க் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். டைடல் பார்க் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் தொழிநுட்பத்தின் முக்கிய மையமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக தலைவர்கள் படிக்காதவங்க! வார்த்தையை விட்ட
அதிமுக விமர்சனம்
ஆனால் டைடல் பார்க் அமைக்கப்படுவதற்கு முன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், இல்லையென்றால் தொழில் நிறுவனங்கள் மதுரையில் தொழில் தொடங்க முன் வரமாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்ச்ர் ஆர்பி உதயகுமார் விமர்சித்தார்.
டைடல் பார்க் பற்றி பிடிஆர்
இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்த போது, மதுரையில் அமைக்கப்பட உள்ள டைடல் பார்க் திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார். அதில், மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டைடல் பார்க் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக, தமிழகத்தின் நிதியமைச்சர் நான் அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பயணித்து தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளேன்.
18 மாதங்களில் டைடல் பார்க்
குறிப்பாக தமிழ்நாடு மற்றும் மதுரை தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதை உறுதி செய்த பின்னரே, டைடல் பார்க் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் தொடங்க நிறுவனங்கள் தயாராக இருப்பதை அறிந்த பின்பே, டைடல் பார்க் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த 18 முதல் 20 மாதங்களில் டைடல் பார்க் கட்டிடம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
காத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்
அதேபோல் சாதாரணமாக இருக்கும் பிபிஓ, கால் செண்டர் போன்ற வேலைவாய்ப்புகள் இல்லாமல், ஆய்வு மற்றும் வளர்ச்சி தொடர்பான நிறுவனங்கள், உயர் வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள், ஃபின் டெக் நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்காக கொண்டு வரப்படும். அதனால் டைடல் பார்க் அமைக்கப்படவுடன், 75 சதவிகித அலுவலகங்கள் நிரம்பிவிடும் என்று தெரிவித்தார். இது மதுரை இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.