எடப்பாடி பக்கம் அடுத்தடுத்து சாயும் தலைகள்! காலையில் இருந்து ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்! பரபர அதிமுக
சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் சுமார் ஒரு வாரமாக நீடிக்கும் நிலையில், இன்று காலை முதல் பல நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த அதிமுக, அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வி அடைந்து இருந்தது.
அக்கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாகக் குறைந்து இருந்தது. மேலும், அதிமுக முறையான எதிர்க்கட்சியாகச் செயல்படவில்லை என்ற வாதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
சும்மா இருந்த சங்கை ஊதியது யார்? ஓபிஎஸ் மகன் மீது பாயும் அதிமுக நிர்வாகிகள்! பின்னணி இது தான்!
ஒற்றை தலைமை
இந்தச் சூழலில் வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதில் கொண்டு வரும் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கக் கடந்த வாரம் அதிமுக தீர்மான குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்த பேச்சு எழுந்து. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் எனச் சிலர் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் ஒற்றை தலைமை தேவை என்ற ரீதியில் பேசி இருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஓபிஎஸ்
இதையடுத்து ஓபிஎஸ் தொடர்ச்சியாக மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்ட பொதுச்செயலாளர் பொறுப்பை மற்றொருவர் ஏற்பது ஜெயலலிதாகவுக்கு செய்யும் துரோகம் என்ற ரீதியிலும் பேசி இருந்தார். மேலும், இன்றைய தினம் ஓபிஎஸ் சாதனைகளை விளக்கும் வகையிலும் பல்வேறு நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு ஈபிஎஸ் தலைமை எடுத்த தவறான முடிவே காரணம் என்ற ரீதியிலும் கூறப்பட்டு இருந்தது.
எடப்பாடி பழனிசாமி
இப்படி ஓபிஎஸ் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். ஆனால், எடப்பாடி தரப்போ அமைதியாகவே அனைத்தையும் கவனித்து வருகிறது. எடப்பாடியிடம் பேசிவிட்டு ஓபிஎஸிடம் மூத்த நிர்வாகிகள் பேசி வரும் போதிலும், எடப்பாடி இந்த விவகாரத்தில் நேரடியாக எதுவும் கூறவில்லை. ஏற்கனவே, கட்சியில் பல மூத்த தலைவர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் காலை முதலே பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் எடப்பாடிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர். இது குறித்து வெளிப்படையாகவே செய்தியாளர்களிடமும் பேசி வருகின்றனர்.
பெருகும் ஆதரவு
இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், " இளைஞரணி செயலாளர்களும், மாநில எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆசி பெற்றனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று அதிமுக ஒரே தலைமையில் செயல்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு தெரிவிக்கிறது. ஒற்றை தலைமை முடிவை ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்" என்றார்.
சொந்த மாவட்டத்திலேயே சிக்கல்
ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளே ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தேனி மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல ஒற்றைத் தலைமை நிச்சயம் உருவாகும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கையனும் தெரிவித்து உள்ளார்.
வைகைசெல்வன்
முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், "ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர். இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்பதில் பன்னீர்செல்வம் தரப்பு உறுதியுடன் உள்ளது. இரு தரப்பினரின் கருத்துகளையும் மூத்த அதிமுக தலைவர்கள் இருவரிடமும் பேசிவருகிறார்கள். அதனால், ஒற்றைத் தலைமை சர்ச்சையில் சமரச முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறி உள்ளார்.
பொதுக்குழு முடிவு செய்யட்டும்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரையும் இதேபோல எடப்பாடிக்கு ஆதரவான கருத்தையே தெரிவித்துள்ளார். அதாவது 5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது எனச் சட்ட விதியில் கூறப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.
ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்
இது மட்டுமின்றி அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் எனவும் பல மாவட்டச் செயலாளர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். பொதுக்குழுவிலும் எடப்பாடியின் செல்வாக்கே சற்று ஓங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி காலை முதலே அதிமுகவில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வரும் என்றே கூறப்படுகிறது