"பல கட்சிகள் வந்துள்ளன.. பல கட்சிகள் காணாமல் போய் உள்ளன.." உதயநிதி பரபர பேச்சு! யாரை சொல்கிறார்
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதற்கிடையே விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்குத் துணை முதல்வர் உதயநிதி அளித்துள்ள பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. விஜய்க்கு வாழ்த்து சொன்ன உதயநிதி, அதேநேரம் மாநிலத்தில் பல கட்சிகள் காணாமலும் போய் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் இப்போது ஹெச் வினோத் படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுமையாக முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியிருக்கிறார். தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். சினிமாவுக்கு நடுவே அரசியல் கட்சி பணிகளையும் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம்: இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இப்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள நேற்றிரவு முதலே தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்தனர்.. கூட்டம் மிகப் பெரியளவில் திரண்ட நிலையில், அப்பகுதியில் டிராபிக் பாதிப்பும் மோசமானது. இதையடுத்து மாநாடு திட்டமிட்ட நேரத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் முன்கூட்டியே தொடங்கப்பட்டது.
உதயநிதி பதில்: விஜய் அரசியல் வருகைக்கு பல்வேறு தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள். அதன்படி விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதியும் பதிலளித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வாழ்த்து சொன்ன விஜய், அதேநேரம் தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் வந்துள்ளன.. பல கட்சிகள் காணாமலும் போய் இருப்பதாகக் குறிப்பிட்டார். எல்லாவற்றையும் தாண்டி மக்கள் பணியே முக்கியம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, "நண்பர் விஜய் சிறு வயதில் இருந்து எனக்குத் தெரியும். நான் தயாரித்த முதல் படத்தில் விஜய் தான் நடித்து இருந்தார். அவரது இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
உரிமை இருக்கு: தொடர்ந்து திராவிட சித்தாந்தத்திற்கு மாற்றாக வரும் புதிய கட்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர்,"இங்கு எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை.. யார் நினைத்தாலும் கட்சி தொடங்கலாம். நாளை நீங்கள் நினைத்தாலும் 10 பேர் சேர்ந்து கட்சி தொடங்கலாம். அதற்கு இங்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது.
பல கட்சிகள் காணாமல் போய் உள்ளன: மேலும், கடந்த 75 ஆண்டுகளில் இங்கு எந்தவொரு கட்சியும் தொடங்கியதே இல்லை என்று சொல்ல முடியாது. பல கட்சிகள் வந்துள்ளன.. பல கட்சிகள் காணாமல் போய் இருக்கிறது.. இங்கு மக்கள் பணியே முக்கியம்.. மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதும் முக்கியம். அதேபோல கொள்கைகளும் முக்கியம்" என்றார். உதயநிதியின் இந்த பதில் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications