ஆளுக்கொரு பகுதி! பிரச்சாரத்தை பிரித்துக் கொண்ட திமுக வி.ஐ.பி.க்கள்! யார் யார் எங்கெங்கு?
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் நடத்தி வரும் நிலையில், அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் களப்பிரச்சாரத்தை தொடங்கியிருக்கின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன், திருச்சி சிவா, ஆ.ராசா, ராஜீவ்காந்த், நாஞ்சில் சம்பத், திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட 11 பேர் திமுகவுக்கு வாக்கு கேட்டு மக்களை சந்திக்கவுள்ளனர்.
மேற்கண்ட இவர்கள் எந்தெந்த பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்;
மினிமம் கட்டுப்பாடு.. தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் விதிகள்? இன்று மீட்டிங் போடும் முதல்வர் ஸ்டாலின்
பொதுச்செயலாளர்
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்கிறார். வயது மூப்பு காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு அவர் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை. இதேபோல் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தனது ஸ்ரீ பெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் வரும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் மட்டும் பரப்புரை நிகழ்த்தவுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 12 மாநகராட்சிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். இன்று கரூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட அவர், திருச்சி, தஞ்சை, கடலூர், சென்னை, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை என தனது பயணத்திட்டத்தை வகுத்திருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் இன்று பிரச்சாரத்தை தொடங்கி செந்தில்பாலாஜி பொறுப்பு அமைச்சராக உள்ள கோவை மாவட்டத்தில் 17-ம் தேதி பரப்புரையை நிறைவு செய்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கனிமொழி எம்.பி.
திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய 5 மாவட்டங்களில் மட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்யவிருக்கிறார். அதேபோல் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருவில்லிப்புத்தூர், கொல்லங்கோடு, செங்கோட்டை, சுரண்டை, புளியங்குடி, சங்கரன்கோவில், உள்ளிட்ட நகராட்சிகளிலும் கனிமொழி பரப்புரை செய்கிறார்.
முக்கியப் பிரமுகர்கள்
பெரம்பலூர் மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் ஆ.ராசா பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் திருச்சி சிவா சேலம் மற்றும் நாமக்கல் 2 மாவட்டங்களில் மட்டும் பரப்புரை நிகழ்த்தவுள்ளார். மேற்கண்ட இவர்களுக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் லியோனி, சுப.வீரபாண்டியன், ராஜீவ்காந்தி, நாஞ்சில் சம்பத், ஆகிய நால்வரும் பேரூராட்சி அளவில் பல மாவட்டங்களில் பிரச்சாரம் செய்யவிருக்கிறார்கள்.
இரண்டு பேர்
திமுகவுக்காக 11 பேர் பல பகுதிகளில் களப்பிரச்சாரம் செய்தாலும் கூட, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி ஆகிய இருவரது பிரச்சாரம் மட்டுமே மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கது. மற்றவர்கள் பேச்சை கேட்பதற்கும் அவர்களை பார்ப்பதற்கும் கூடும் கூட்டத்தை விட உதயநிதிக்கும், கனிமொழிக்கும் மட்டுமே கூட்டம் அதிகம் திரளும் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.