‘திமுகவை விட கூடுதல் சீட் தர பலர் தயாராக உள்ளனர்’ – உடைத்து பேசிய திருமாவளவன்
தர்மபுரி: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், திமுகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன், எங்களுக்கு திமுகவை விட கூடுதலாக சீட் தருவதற்கு எவ்வளவோ பேர் தயாராக இருக்கிறார்கள். பேசியும் பார்த்தார்கள். என்று ஓப்பனாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "20க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியிருப்பது தான் இந்தியா கூட்டணி. அதில் ஒரு உறுப்பு இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. அகில இந்தியளவில் உள்ள கூட்டணி கட்சிகள் விசிகவும் ஒன்று. நாம் உண்மையான அம்பேத்கரின் பிள்ளையாக, உண்மையான பெரியாரின் பிள்ளையாக இருக்கிறோம். போலியாக இல்லை.

உதட்டளவில் இல்லை. பிழைப்புவாத அடிப்படையில் இல்லை. உண்மையான அம்பேத்கரின் பிள்ளைகள் நாங்கள். அதை புரிந்து கொள்வதற்கு அம்பேத்கரை பிடித்தால் தான் புரியும். நம்மைப் பற்றி புரிந்துகொள்வதற்கே அவர்களுக்கு ஒரு புரிதல் தேவைப்படுகிறது. சாதியவாதிகளால் நம்மை புரிந்துகொள்ள முடியாது. மத வெறியர்களால் நம்மை புரிந்து கொள்ள முடியாது. அதிகார பசி கொண்டு ஆட்டம் போடுவோர்களால் நம்மை புரிந்து கொள்ள முடியாது.
வெறும் அதிகாரத்திற்காகவும், பொருளாதாரத்திற்காகவும் மயங்கி கொள்கைகளை விட்டு விலகி போகிற சராசரி அரசியல் கட்சி இல்லை விடுதலை சிறுத்தைகள் கட்சி. எல்லோரும் அவன் செய்தைபோல செய்தால் நாம் வந்துவிடுவோம் என நினைக்கிறான். ஆசைக் காட்டினால் வந்துவிடுவான்.. இதைச் சொன்னால் வந்துவிடுவான்.. அதைச் சொன்னால் வந்துவிடுவான் என்று நம்புகிறார்கள்.
அதுதான் முக்கியம் என்றால், திமுகவுடன் சீட்களுக்காக தான் கூட்டணி வைக்கிறோம், அவர்களுடன் ஒட்டியுள்ளோம் என்று சிலர் நினைக்கலாம். அவர்களை விட கூடுதலாக தர எவ்வளவோ பேர் தயாராக இருக்கிறார்கள். பேசியும் பார்த்தார்கள். அதுதான் முக்கியம் இருந்தால் அங்கு ஓடியிருப்போமே. அந்த முடிவை எடுக்க பெரிய சிரமம் இல்லை. உண்மையில் எங்களுக்கு அது முக்கியமில்லை.
எங்கள் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் இறுதி மூச்சு வரை இயங்குவதுதான் எங்களின் இலக்கு. அவர் கண்ட கனவை நனவாக்குவது தான் எங்கள் போராட்டம். கொள்கை பிடிப்புள்ள பலருக்கும் நம் மீது எரிச்சல் வருகிறது. எதிர்த்தோ, ஆதரித்தோ சிறுத்தைகளை பற்றி பேசியே ஆக வேண்டும் என்கிற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.
திமுகவுடன் முட்டுக் கொடுக்கிறார்கள் என்றும் எங்களை கூறுகிறார்கள். இதற்கு பலமுறை விளக்கமளித்துவிட்டேன். தேசியளவு ஆபத்தான இயக்கம் பாஜக என்று நான் மட்டுமல்ல இடதுசாரி சிந்தனையாளர்கள், முற்போக்கு அமைப்புகள் எல்லாரும் கூறுகிறார்கள். பாஜக ஆர்எஸ்எஸ் வலிமை பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல. அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் ஒரே ஆயுதம்." என்றார்.












Click it and Unblock the Notifications