"தப்பா இருக்கே.." சென்னை- கோவை வந்தே பாரத்.. இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதற்குள் கிளம்பிய எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாட்டின் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சென்னை கோவை இடையே இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த ரயில் இன்னும் சேவையை ஆரம்பிக்கவே இல்லை, இருப்பினும் இதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
நாட்டில் பலரும் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக இந்தியன் ரயில்வே இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரயில் சேவை இருக்கும் நிலையில், அதில் பயணிக்கவே பலரும் விரும்புகின்றனர்.
வசதியாகப் பயணிக்கலாம், செலவு குறைவு எனப் பல காரணங்கள் இதற்கு இருக்கின்றனர். இருப்பினும், கடந்த சில காலமாக இந்தியன் ரயில்வேயில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருந்தது.

வந்தே பாரத்
அதைப் போக்கும் வகையில் மத்திய அரசு சில காலமாக புதிய வசதிகளை மேம்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ். இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு அதிவேக ரயிலாகும். இப்போது சென்னை- பெங்களூர்- மைசூரு இடையே உட்பட பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அடுத்த நிதியாண்டிற்குள் 300க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே அவர்களின் இலக்காகும்.

கோவை- சென்னை வந்தே பாரத்
தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை- பெங்களூர்- மைசூரு இடையே வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அடுத்தகட்டமாகச் சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கவும் முடிவு செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 8ஆம் தேதி இதைப் பிரதமர் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. இப்போது, சென்னை-கோவை இடையே பகல் நேரத்தில் இரண்டு சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஒரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இது தவிர மற்ற நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பல எக்ஸ்பிரஸ்களும் இரு நகரங்களையும் இணைக்கிறது.

அட்டவணை
இந்த வந்தே பாரத் அறிவிப்பு தமிழக மக்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இது சென்னை மற்றும் கோவைக்கு இடையே 495 கிமீ தூரத்தைக் கடக்க 7.50 மணி நேரம் வரை ஆகிறது. சதாப்தி ரயில் 7 மணி நேரத்தில் இரு நகரங்களையும் இணைக்கும் நிலையில், சதாப்தி ரயில் அதை விட வேகமாக இரு நகரங்களையும் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான உத்தேச பயண அட்டவணையும் சமீபத்தில் வெளியானது. வந்தே பாரத் ரயிலை அனைவரும் வரவேற்றாலும் அதன் அட்டவணையைத் தான் சிலர் எதிர்த்துள்ளனர்.

எதிர்ப்பு
இது குறித்து ஈரோடு காங்கிரஸ் கமிட்டி மைனாரிட்டி பிரிவின் தலைவர் இந்தியன் ரயில்வேக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ரயில் எண் 20644 கோவை-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் விரைவு ரயில், கோவையில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டு, திருப்பூருக்குக் காலை 6.30 மணிக்கும், ஈரோட்டுக்கு 7.17 மணிக்கும் சென்றடையும். காலை 8.08 மணிக்குச் சேலத்தில் நிற்கும் நிலையில், மதியம் 12.10 மணிக்குச் சென்னை வந்தடையும். ஜோலார்பேட்டை மற்றும் காட்பாடி சந்திப்புகளில் ரயில் நிற்காது.

ஒரே நேரத்தில்
அதேநேரம் இதற்குச் சற்று நேரம் கழித்து அதாவது 6.15 மணிக்கு ரயில் எண் 12680 கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 2 மணிக்குச் சென்னை சென்றடைகிறது. ரயில் புறப்படுவதில் இந்த இரு ரயில்களுக்கும் இடையே 15 நிமிடங்கள் தான் இருக்கிறது. அதேபோல், ரயில் எண் 22638 மங்களூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் கோவையில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு (காலை 9.10) வழியே மதியம் 3 மணிக்குச் சென்னை செல்கிறது.

மாற்ற வேண்டும்
இந்த ரயிலுக்குப் பிறகு 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் தான் 12 மணிக்குக் கோவையில் இருந்து புறப்படுகிறது. அதாவது நான்கு மணி நேரத்திற்கும் மேலாகக் கோவையில் இருந்து சென்னைக்கு ரயில் இல்லை. இதன் காரணமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 9 மணி முதல் 10 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இயக்க வேண்டும்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை- கோவை வந்தே பாரத்
இந்தியன் ரயில்வே அறிவிப்புப்படி, ரயில் எண் 20643 சென்னை - கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்படும். இது 8.20 மணிக்குக் கோவை சென்றடையும். 10 நிமிடம் கழித்து 2.30 மணிக்கு ரயில் எண் 12679 சென்னை - கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் 10 மணிக்குக் கோவை சென்றடையும். இந்த வந்தே பாரத் ரயிலும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசுக்கு மிக அருகே இருப்பதால், இதற்கான அட்டவணையையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications