Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட மாநில தொழிலாளர்கள் போயாச்சு.. வேலைகள் ஸ்தம்பிப்பு.. சிக்கலில் தொழில்துறை.. புதிய பிரச்சினை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் சொந்த மாநிலங்களுக்குப் போய் விட்டதால் தொழில்களை முழு வீச்சில் ஆரம்பிக்க முடியாமல் திணறும் நிலை உருவாகியுள்ளதாம்.

வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தை நம்பி ஒரு காலத்தில் இங்கு படையெடுத்து வந்தனர். ஆனால் இன்று அந்த வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லாமல் தொழில்துறையே படுத்து விடும் அளவுக்கு நிலைமை போயிருப்பதை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஆனால் இது கசப்பான உண்மை. மீண்டும் இந்தத் தொழிலாளர்கள் திரும்பி வராவிட்டால் மிகப் பெரிய நெருக்கடியை தொழில்துறை சந்திக்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு வட மாநிலத் தொழிலாளர்களை நம்பி தமிழகத்தின் பல்வேறு தொழில்கள் உள்ளன.

கனரகத் தொழில்கள்

கனரகத் தொழில்கள்

தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டுமானத் தொழில் முதல் கனரக தொழில் வரை முன்பெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் இருப்பார்கள். அதைத் தாண்டி பிற மாநிலத் தொழிலாளர்களை அதிகம் காண முடியாது. ஆனால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு நிலைமை பெரிதாக மாறியது. வட மாநிலத் தொழிலாளர்கள் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிஷா என பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அதிக அளவில் வரத் தொடங்கினர்.

கொத்தனார்ஜி.. சித்தாள்ஜி

கொத்தனார்ஜி.. சித்தாள்ஜி

கட்டுமானத் தொழிலில்தான் இவர்கள் முதலில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கொத்தனார், சித்தாள் வேலைகளுக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் இடம் பெற ஆரம்பித்தனர். வழக்கமாக நம்ம ஊர் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் கூலியில் பாதிதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் கவலைப்படவில்லை. நாங்க வேலை பார்க்கத் தயார்.. என்று இறங்கினர். பிறகென்ன நம்ம ஊர் தொழிலாளர்களை ஒரம் கட்டத் தொடங்கிய பில்டர்கள், வட மாநிலங்களிலிருந்து பெருமளவில் தொழிலாளர்களை இங்கு இறக்கி வேலையில் ஈடுபடுத்தத் தொடங்கினர்.

 கொடுப்பதை வாங்கிக்குவோம்

கொடுப்பதை வாங்கிக்குவோம்

கூலி அதிகம் கேட்டு கொடி பிடிப்பதில்லை, டைமுக்கு வேலைக்கு வருவார்கள், தேவையில்லாத பிரச்சினைகள் கிடையாது, தண்ணி அடித்து விட்டு வேலையை சரியாக செய்யாமல் இருப்பது கிடையாது, தொழில் அக்கறை, கடும் உழைப்பு என வட மாநிலத் தொழிலாளர்களிடம் காணப்பட்ட ஏகப்பட்ட பாசிட்டிவ் அம்சங்கள் காரணமாக அவர்களுக்கு கிராக்கி கூடியது. இதையடுத்து ஹோட்டல்களிலும் இவர்கள் இடம் பெற ஆரம்பித்தனர். திண்டுக்கல் தலப்பா கட்டி முதல் கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹோட்டல்களிலும் "கியா சாப் .. கித்னா சாப்" என்ற குரல்கள் இடம் பெற ஆரம்பித்தன.

எங்கெங்கும் இந்திக்காரர்கள்

எங்கெங்கும் இந்திக்காரர்கள்

பெட்ரோல் பங்குகள், டோல்கேட்டுகள் என எங்கு பார்த்தாலும் இவர்களின் பெருக்கம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சில நூறு பேராக இருந்த இவர்களின் எண்ணிக்கை, திருப்பூரில் மட்டும் சமீபகாலத்தில் லட்சக்கணக்காக மாறத் தொடங்கியது. தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒரு தொழிலாளர் சக்தியாக இவர்கள் மாறிப் போயினர். ஆனாலும் யூனியன் அமைக்கவில்லை கொடி பிடிக்கவில்லை. இதனால்தான் இவர்களுக்கான கிராக்கி நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போனது (இவர்களிடமும் சில குறைகள் இருந்தாலும் கூட).

சிரமத்தில் தொழில்துறை

சிரமத்தில் தொழில்துறை

வட மாநிலத் தொழிலாளர்களைத் தவிர்த்து விட்டு எந்தத் தொழிலையும் தமிழகத்தில் பெரிய அளவில்நடத்த முடியாது என்ற நிலையும் இப்போது ஏற்பட்டு விட்டது. 100 பேரை வைத்து ஒரு யூனிட் ஆரம்பிக்க வேண்டுமா.. பிடி வட மாநிலத் தொழிலாளர்களை என்ற அளவில்தான் நிலைமை உள்ளது. காரணம், அந்த வேலை சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் வட மாநிலத் தொழிலாளர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று மனதில் பதிந்து போன எண்ணம். இப்படி ஒரு நிலைமை ஏற்பட நம்ம ஊர் தொழிலாளர்களும் ஒரு காரணம்.

நமக்கு நாமே ஆப்பு

நமக்கு நாமே ஆப்பு

தேவையில்லாமல் பேசுவது, குடிக்கு அடிமையாகி விட்ட அவலம், கூலி அதிகம் கேட்டு வாதிடுவது (அதில் தப்பில்லை என்றாலும் கூட அளவுக்கு அதிகமாக ஆசைப்படும் சிலரால் மொத்தமும் போனதுதான் இப்போது மிச்சம்), நேரத்துக்கு வேலைக்கு சரியாக வருவதில்லை, தொழில் பக்தி குறைந்து போனது என ஏகப்பட்ட நெகட்டிவ் அம்சங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களிடம் அதிகரித்ததே வட மாநிலத் தொழிலாளர்கள் பக்கம் முதலாளிகள் சாய்ந்து போக முக்கியக் காரணமாக சொல்கிறார்கள்.

ஆளே இல்லை

ஆளே இல்லை

இன்றைய நிலைக்கு வருவோம்.. தற்போது வட மாநிலத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே நடந்தும், ரயில்களிலும், பஸ்களிலும் என அவரவர் மாநிலங்களுக்குப் போய் விட்டனர். இதனால் தமிழகத்தில் கட்டுமானத் தொழில் மிகப் பெரிய முடக்கத்தை சந்தித்துள்ளதாக சொல்கிறார்கள். உள்ளூர் தொழிலாளர்களை தேடிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம். ஆனால் அவர்களும் சரிவர கிடைப்பதில்லை. காரணம் அவர்கள் எல்லாம் வேறு வேறு தொழில்களுக்கு மாறிப் போய் விட்டதால் தேவையான ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கிண்டி வெறிச்சோடிருச்சு

கிண்டி வெறிச்சோடிருச்சு

சென்னையில் உள்ள முக்கியமான தொழிற்பேட்டையான கிண்டி எஸ்டேட்டில் உள்ள நிறுவனங்கள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றனவாம். தொழிலாளர்கள் இல்லாமல் பல யூனிட்டுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். கொரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பும் வரை நாங்களும் இயல்புக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக இங்குள்ள நிறுவன உரிமையாளர்கள் சோகத்துடன் சொல்கின்றனர்.

கனகாம்பரம் கவலை

கனகாம்பரம் கவலை

இதுகுறித்து கிண்டி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே.வி.கனகாம்பரம் கூறுகையில், 10 சதவீத வேலையாட்களுடன்தான் பல நிறுவனங்களை நடத்த வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் போய் விட்டனர். உள்ளூர் வேலையாட்களும் கிடைக்கவில்லை. பஸ் போக்குவரத்து இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறார் கனகாம்பரம்.

வேலைகள் நின்னு போச்சு

வேலைகள் நின்னு போச்சு

கட்டுமானத் தொழில்தான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளதாம். பல நிறுவனங்களின் கட்டுமான வேலைகள் அப்படி அப்படியே நின்று போய் விட்டனவாம். காரணம், கட்டுமானத் தொழிலாளர்களில் 70 சதவீதம் பேர் வட மாநிலத் தொழிலாளர்கள் என்பதால். லாக்டவுன் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படும் வரை இவர்கள் திரும்ப வர வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். எனவே அடுக்குமாடிக் குடியிருப்புப் பணிகள் பெரும் தேக்கத்தை சந்தித்துள்ளன. பில்டர்கள் மட்டுமல்லாமல் பிளாட்டுகளை வாங்குவோரும் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வந்துள்ளது.

நம்மவர்கள் விழிப்பார்களா

நம்மவர்கள் விழிப்பார்களா

அதேசமயம், தமிழகத்தைச் சேர்ந்த உள்ளூர் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப் பெரிய "ரிவைவல் சான்ஸ்" இது என்று தொழில்துறையினர் கருதுகிறார்கள். தங்களிடமும் உள்ள சின்னச் சின்ன குறைகளை களைந்து விட்டு முழு ஈடுபாட்டுடன், தமிழகத் தொழிலாளர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பினால் நிச்சயம் வட மாநிலத் தொழிலாளர்களால் ஏற்பட்ட முடக்கத்திலிருந்து அவர்கள் விடுபட முடியும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தாங்கள் இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெற தமிழக தொழிலாளர்கள் முயல வேண்டும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+