விஜயகாந்த் வீட்டுக்கு முன் கதறிய பெண்கள்… பிரேமலதா அளித்த வாக்குறுதி....
சென்னை: சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு முன் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்துவருகிறார்கள்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி இரண்டு இடங்களில்தான் மக்கள் அதிகம் குவிந்து வருகிறார்கள். ஒன்று, தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்தின் நினைவிடம். அதற்கு அடுத்தபடியாக அவரது வீடு. நினைவிடத்திற்குச் செல்வர்கள் அவரது சமாதியை வணங்கிவிட்டுத் திரும்பிவருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால், அவரது வீட்டுக்குச் செல்பவர்கள் சுவரில் பதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பெயர்ப் பலகை முன்பாக நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டு திரும்பி வருகிறார்கள். இதனால், அந்தப் பகுதி மக்கள் அதிகம் கூடும் இடமாக மாறி இருக்கிறது.
இதனால் விஜயகாந்த்தின் 'ஆண்டாள் அழகர்' இல்லம் ஹாட் ஸ்பாட் ஆக மாறி உள்ளது. அதுவும் அதிகாலையிலேயே வெளி ஊர்களிலிருந்து மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்.

சேலம், திருச்சி, விழுப்புரம் என்று எல்லா பகுதிகளிலிருந்து வரும் மக்களை நம்மால் பார்க்க முடிகிறது. அப்படி வீடு தேடி வரும் மக்களை அவரது இரண்டு மகன்களும், மனைவி பிரேமலதாவும் வரவேற்று ஆறுதல் கூறு வருகின்றனர்.
ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாகச் சென்னை சாலிகிராமம் தான் இருந்து வந்தது. பெரிய அளவிற்கு நட்சத்திர அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னால் சாலிகிராமத்தில் தங்கி இருந்த திரை நட்சத்திரங்கள், ஒரு கட்டத்திற்குப் பின்னால் இசிஆர் பகுதி பக்கம் வீடுகளைக் கட்டிக் கொண்டு சென்று விட்டார்கள்.

அப்படித்தான் ஒரு காலத்தில் சாலிகிராமத்திலிருந்து விஜய், படப்பைக்குச் சென்று விட்டார். அவரது தந்தைகூட அடையாறுக்கு சென்று விட்டார். இப்போது சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் பழைய வீடு, வாடகைக்கு விடப்பட்டுவிட்டது.
இவரைப் போலப் பல நடிகர்கள் இன்றைக்கு உச்சம் தொட்ட பிறகு சாலிகிராமத்திலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். ஆனால், சினிமா மற்றும் அரசியலில் பெரிய அளவுக்குப் புகழ்பெற்ற போதும் கூட விஜயகாந்த் அந்த சாலிகிராம வீட்டை விட்டு வேறு இடங்களுக்கு மாறவில்லை.

அதே 54 இலக்கம் கொண்ட ஆண்டாள் அழகர் வீட்டில்தான் இறுதிவரை வாழ்ந்துவந்தார். ஆண்டாள் என்பது அவரது தாயார் பெயர். விஜயகாந்த் 1 வயது இருக்கும் போது அவரது தாயார் மறைந்துவிட்டார். அவருக்குத் தங்கை ஒன்று பிறந்த 22 ஆம் நாள் அவரது தாயை இயற்கை அழைத்துக் கொண்டது.
எனவே தாய்ப் பாசம் என்றால் தெரியாதவர் விஜயகாந்த். அவரது தந்தை பெயர்தான் அழகர்சாமி. அதையும் சேர்த்துத்தான் அவரது கல்லூரி, வீடு எனச் சகலத்திற்கு அடையாளப் பெயராக வைத்தார் விஜயகாந்த்.
இப்போது அந்த அடையாள சின்னமாக உள்ள வீட்டின் முன்பாக மக்கள் கும்பல் கும்பலாக வந்து குவிந்துவருகிறார்கள்.

காலை நேரத்தில் விஜயகாந்த் வீட்டுக்கு வந்திருந்தார் கலா மாஸ்டர். அவர், "எனக்கு விஜயகாந்த்தான் காட் ஃபாதர். என் வீட்டுப் பிரச்சினைகள் எதை வேண்டுமானாலும் அவரிடம் கலந்தாலோசிப்பேன். என் குழந்தைக்கு அவர் தான் பெயர் வைத்தார். பிறந்த 30 நாள் என் வீட்டுக்கு வந்து பெயர் வைத்தார்.
நான் அவரை விஜி சார் என்றுதான் அழைப்பேன். அவரை நாங்கள் மிஸ் பண்றோம்.
நான் அவரது மறைவின்போது இலங்கையிலிருந்தேன். அங்குள்ள தமிழர்கள் வந்து என்னைப் பார்த்துக் கண்கலங்கிவிட்டுச் சென்றார்கள்.

அவரது வாரிசுகளை சினிமாவில் வளர்வதற்கு திரைத்துறையினர் வாய்ப்பு தரவேண்டும். இன்னொரு கேப்டனாக அவரது பிள்ளைகள் திரைத்துறையில் இருக்க வேண்டும்.
தவசி படத்தைக் கும்பகோணத்தில் ஷுட் பண்ணோம். ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பார்க்கக் காத்திருந்தனர். அவர் படப்பிடிப்பில் சேர் போட்டு உட்கார மாட்டார். ஸ்டுல் போட்டுத்தான் உட்காருவார். அவ்வளவு எளிமை அவர்.

படப்பிடிப்பில் மக்கள் அவ்வளவு சத்தம் போட்டார்கள். நாங்கள் யார் சொல்லியும் கேட்கவில்லை. அவர் எழுந்து சைலண்ட் என்று ஒரு குரல் கொடுத்தார். அவ்வளவு பேரும் கப் சிப் என்று அடங்கிவிட்டார்கள். அந்தளவுக்கு பவர் உள்ளவர் அவர்.
அவருடன் சேர்ந்து நடிகர் சங்க ஷோ பண்ணோம். ஒரு விசயத்திலும் தலையிட மாட்டார். முழுப் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்தார். அவ்வளவு சிறந்த மனிதர். அன்றைக்கு நடிகர் சங்க ஷோவை நான் பண்ணவில்லை என்றால், நான் டான்ஸ் மாஸ்டராக வந்திருக்கவே முடியாது. அது 100% உண்மை" என்றார்.

சேலத்திலிருந்து வந்திருந்த பெண்மணி, பிரேமலதாவைக் கட்டிக் கொண்டு அழுதார். அவரது குழந்தைக்கு விஜயகாந்த்தான் பெயர் வைத்ததாகக் குறிப்பிட்டார். விஜயகாந்த் மகனைக் கட்டிக் கொண்டு நீங்கள் சினிமாவில் அப்பாவைப் போல் நடிக்க வேண்டும் என்றார்.
பேருந்து வசதிகள் சரியாக இல்லாததால் உடனடியாக வந்து இறுதிச் சடங்கில் அவரது முகத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கதறினார். அவரை அணைத்துக் கொண்ட பிரேமலதா, 'வீட்டின் முன்பாக உள்ள விஜயகாந்த் புகைப்படத்தைக் காட்டினார். அலுவலகம் போய் சமாதியைப் பார்த்தீர்களா? என்று விசாரித்தார். அங்கே நினைவுச்சின்னம் கட்டப் போகிறோம். அது கோயில் போல இருக்கும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அங்கே வரலாம். யாரும் தடை போட மாட்டார்கள் என்று சொன்னார்.

மற்றொருவர் விஜயகாந்த் மகன்கள் இருவரையும் அணைத்து ஜெபம் செய்தார். பின்னால் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்துவிட்டுப் புறப்பட்டார். அவரைப் போலவே மற்றொரு இஸ்லாமியர் ஒருவர் அவரது மதநம்பிக்கையின் படி அவர்களைக் கட்டி அணைத்து துக்கம் விசாரித்தார்.
இங்கே கூடியவர்கள் யாரும் ஒரு மதத்தினர் அல்ல. பல மதங்களைச் சேர்ந்தவர்கள். அனைவரும் ஒரே மாதிரியாக விஜயகாந்த்தின் மீது அன்பு காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications