மாரிதாஸ் கைது.. பெரியாரின் முக்கிய கூற்றை நினைவுபடுத்தி அமீர் பரபரப்பு கருத்து.. சர்ச்சை!
சென்னை: மாரிதாஸ் கைது செய்யப்பட்டது குறித்தும், அவர் மீதான முதல் வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீக்கப்பட்டது குறித்தும் இயக்குனர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரையை சேர்ந்த யூ டியூபர் மாரிதாஸ், Maridhas Answers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியது, இருப்பிரிவினர் இடையே மோதலை உண்டாக்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் 3 முறை கைது செய்யப்பட்டார்.
இதில் அரசுக்கு எதிராக அவதூறு பரப்பிய முதல் வழக்கில் இருந்து மாரிதாஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் மாரிதாஸ் மீதான முதல் வழக்கு ரத்து செய்யப்பட்டது குறித்து இயக்குனர் அமீர் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் விழா ஒன்றில் பேசிய அமீர், தமிழ்நாட்டில் அரசியல் நாகரீகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அரசியல் கலாச்சாரம் சிறப்பாக மாறிக்கொண்டு இருக்கிறது. அம்மா உணவகம், அம்மா பெட்ரோல் போன்று முந்தைய அரசில் நிறைய திட்டங்கள் வந்தன.

திட்டங்கள்
அந்த திட்டங்கள் தற்போது அதே பெயரில் இயங்குகிறது. இது மிகப்பெரிய அரசியல் மாற்றம். திமுக ஆட்சியில் அந்த பெயர்கள் மாற்றப்படவில்லை. அதேபோல் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை விழா ஒன்றில் முதல்வர் மேடைக்கு அழைத்து அமர வைத்தார். இதெல்லாம் மிகப்பெரிய அரசியல் நாகரீகம். மாரிதாஸ் கைது சரியான முடிவுதான்.

மாரிதாஸ்
ஆனால் அவர் முதல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனக்கு பெரியார் சொன்னதுதான் நியாபகம் வருகிறது. நாம் எல்லாம் படித்து, பெரிய ஆள் ஆகி, உயர்ந்த பதவிக்கு வரும் நேரத்தில், சட்டம் இயற்ற கூடிய இடத்தில் ஆரியர்கள் அமர்ந்து இருப்பார்கள் என்று பெரியார் கூறினார். அது இப்போது அப்படியே உறுதியாகி உள்ளது.

நீதிபதி
மாரிதாஸ் மீது குற்றம் இல்லை என்றால் கண்டிப்பாக அவரை விடுவிக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் ஒரு நீதிபதியே மாரிதாஸுக்கு வழக்கறிஞர் போல செயல்பட்டது அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் மாரிதாஸே தான் போட்ட ட்வீட் தவறு என்று தெரிந்து அதை நீக்கி உள்ளார். நாம் நீதிமன்றத்தில் தோல்வி அடைகிறோம்.

தோல்வி
எப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்தினாலும் கடைசியில் நீதிமன்றத்தில் தோல்வி அடையும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆரியர்களின் கையில்தான் இந்த தேசம் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது, என்று இயக்குனர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications