சென்னை மக்களால் பிரச்சனை.. காணும் பொங்கல் விடுப்பை ரத்து செய்ய பரிந்துரைப்போம் - பசுமை தீர்ப்பாயம்
சென்னை: காணும் பொங்கலன்று மக்கள் சென்னை மெரினா கடற்கரையை குப்பைகளாக்கி விட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், காணும் பொங்கல் அன்று விடுமுறையை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைப்போம் என்று வார்னிங் செய்துள்ளது.
கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்பிறகு 15ம் தேதி மாட்டு பொங்கலும், 16ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் தங்களின் குடும்பத்துடன் சென்னை மெரினா கடற்கரை, வண்டலூர் மிருகக்காட்சி சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது வழக்கம்.
வழக்கத்தை விட காணும் பொங்கல் நாளில் சென்னை மெரினாவில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள். அந்த வகையில் கடந்த 16ம் தேதி காணும் பொங்கல் தினத்தில் சென்னை மெரினாவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை மெரினா கடற்கரையிலேயே விட்டு சென்றனர்.
இதனால் சென்னை மெரினா கடற்கரை குப்பையாக காட்சியளித்தது. இந்நிலையில் தான் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணன் மற்றும் சத்ய கோபால் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கியது.
அப்போது புஷ்பா சத்யநாராயணன், தனக்கு வந்த 2 புகைப்படங்களை சுட்டிக்காட்டி, ‛‛காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையை மக்கள் குப்பை குளமாக்கி உள்ளனர். மக்களுக்கு கடற்கரையை எப்படி பாதுகாப்பது? என்பது தெரியவில்லை. காணும் பொங்கல் நாளில் விடுமுறை விடக்கூடாது என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்'' என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதை கேட்டதும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக நாதன், ‛‛குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி அபராதம் விதிக்க வேண்டும். அப்படி அபராதம் விதிக்காவிட்டால் படித்தவர், படிக்காதவர் என்று அனைவரும் குப்பைகளை வீசி செல்வார்கள்'' என்றார். இதையடுத்து குப்பைகளை வீசுவோருக்கு அபராதம் விதிக்க சிறப்பு படையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம் அதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications