பாஜக அதிமுக கூட்டணி அமைந்தால்.. சட்டசபை தேர்தலில் போட்டி திமுக-தவெக இடையேதான்- மருது அழகுராஜ்
சென்னை: திமுகவை எதிர்ப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அப்படி நடந்தால், 'களம் என்பது திமுக vs தவெக என்பதாகவே அமையும். அதிமுக மூன்றாம் இடத்தை பிடிக்கவே சிரமப்படும்.' என்று அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒருபக்கம் ஆளும் திமுக தன் பலமான கூட்டணியை வருகிற தேர்தலிலும் தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மறுபக்கம் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தவெக கட்சிகளும் சட்டசபை தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கிறார்கள்.

எதிர்ப்பு வாக்குகள் பிரிவது திமுகவுக்கு தான் சாதகமாக முடியும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இதனால் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன்படி அதிமுக, தவெக இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை.
இந்நிலையில், மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 வாரங்களில் 2வது முறையாக சந்தித்துள்ளார். இந்த கூட்டணிக்காக பாஜக மாநிலத் தலைவராக உள்ள மாநிலத் தலைவர் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்கிற தகவலும் வெளியாகி வருகிறது.
அதிமுக முன்னாள் நிர்வாகியும், நமது அம்மா நாளிதழ் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாகவும், அதிமுகவின் செயல்பாட்டை விமர்சித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தில் உள்ள நிலையில், அவர் மீண்டும் ஒரு கருத்தை சொல்லி பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.
இதுகுறித்து மருது அழகுராஜ் தன் எக்ஸ் தள பக்கத்தில், "ஒன்றுபடாத அதிமுகவையும் எடுபடாத எடப்பாடியையும் பாஜக பல்லக்கில் வைத்து தூக்கினால், விஜய்யின் தவெக தலைமையில் கூட்டணி அமைந்து 2026 தேர்தல் களம் என்பது திமுக vs தவெக என்பதாகவே அமையும். எடப்பாடி தலைமையிலான இரு சமுதாய 'எதிமுக' மூன்றாம் இடத்தை தக்க வைக்கவே போராட வேண்டியிருக்கும் அம்புட்டுத் தான்." என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், "தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் தனித்தனியாக நின்றாலும், 2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் அவர்கள் கூட்டணியாக படு தோல்வியை சந்தித்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற அரசியல் மாற்றங்களை மக்கள் விரும்பவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே இவர்கள் ஓரளவுக்கு வெற்றி பெற்றனர். மற்ற மண்டலங்களில் அவர்களுக்கு செல்வாக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை அவர்கள் கூட்டணி அமைத்து நின்றாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதே முடிவு கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதிமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இருப்பதால், அங்கு ஓரளவுக்கு வெற்றி கிடைக்கலாம்.
மற்ற பகுதிகளில் அவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்காது. தவெகவின் வருகை இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் திமுகவுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சி என்ற நிலையை கூட தவெக எட்ட வாய்ப்புள்ளது. தவெக இன்னும் கள அரசியலில் கவனம் செலுத்தினால் அதிமுக - பாஜக கூட்டணி பல தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு தான் செல்லும்." என்றனர்.












Click it and Unblock the Notifications