ஜெயலலிதாவின் முழக்கம்.. சசிகலாவின் முதல் உரை.. எடப்பாடியின் ‘கோடு-ரோடு’.. மை தீட்டிய மருது அழகுராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், 'நமது எம்.ஜி.ஆர்','நமது அம்மா' நாளிதழின் ஆசிரியராக இருந்தவருமான மருது அழகுராஜ், அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்.

தேமுதிக, சமக ஆகிய கட்சிகளில் இருந்த மருது அழகுராஜ் 2008 முதல் அதிமுகவில் இருந்து வரும் நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும்பொறுப்பு வகித்த ஜெயலலிதா முதல், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் வரை பேசிய பிரபலமான பேச்சுகளுக்கு உரை எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ்.

ஜெயலலிதாவின் புகழ்பெற்ற பிரச்சார உரைகள் மட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமி அமைச்சரான பிறகு முதல் மானியக் கோரிக்கை பேச்சையும், சசிகலாவின் முதல் அறிக்கையையும், உரையையும் எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவின் குரல்

ஜெயலலிதாவின் குரல்

அஇஅதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்த மருது அழகுராஜ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜிஆர்' ஆசிரியராக இருந்தவர். பல ஆண்டுகாலமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உரை, அறிக்கைகள் எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் பல புகழ்பெற்ற பேச்சுகளுக்குப் பின்னணிக் குரலாக இருந்தவர். "மோடியா லேடியா?, மக்களால் நான் மக்களுக்காகவே நான்" ஆகிய ஜெயலலிதாவின் முழக்கங்களை உருவாக்கி பிரசார மேடைகளை அதிரவிட்டவர் மருது அழகுராஜ்.

சசிகலாவின் முதல் உரை

சசிகலாவின் முதல் உரை

சித்ரகுப்தன் எனும் பெயரில் நமது எம்ஜிஆரில் மருது அழகுராஜ் எழுதும் கட்டுரைகள், கவிதைகள் மிகவும் பிரபலம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு, சசிகலா தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த 'நமது எம்.ஜி.ஆர்'நாளேட்டின் ஆசிரியராகத் தொடர்ந்தார் மருது அழகுராஜ். அரசியலின் திரைமறைவில் பெரும் அதிகாரத்தோடு இருந்த சசிகலா, முன்வரிசைக்கு வந்தபோது, சசிகலாவின் முதல் அறிக்கை, முதல் உரையை எழுதிக் கொடுத்தவர் மருது அழகுராஜ். அந்தவகையில், சசிகலாவின் அரசியல் பிரவேசத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்களில் ஒருவர் இவர்.

சித்ரகுப்தன் - காவி கழகம்

சித்ரகுப்தன் - காவி கழகம்

2017ஆம் ஆண்டில் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில், "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்று வெளியானது. அந்தக் கவிதையில் மத்தியில் ஆளும் பாஜக மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. "மோடியா, இந்த லேடியா? எனச் சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்" என்று பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அந்த கவிதையை சித்ரகுப்தன் என்ற பெயரில் மருது அழகுராஜ் எழுதியிருந்தார். இதையடுத்து, நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து மருது அழகுராஜ் நீக்கப்பட்டார்.

நமது அம்மா ஆசிரியர்

நமது அம்மா ஆசிரியர்

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இரட்டைத் தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவுக்கு அதிகாரப்பூர்வ நாளிதழை ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி 2018ஆம் ஆண்டு 'நமது அம்மா' எனும் பெயரில் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழின் ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூன் மாதம் வரை நமது அம்மாவில் ஆசிரியராகப் பணியாற்றினார் மருது அழகுராஜ்.

எம்.எல்.ஏ தேர்தலில்

எம்.எல்.ஏ தேர்தலில்

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் மருது அழகுராஜுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுகவின் கே.ஆர்.பெரியகருப்பனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் மருது அழகுராஜ். 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே திருப்பத்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிருக்கிறார் மருது அழகுராஜ்.

பொறுப்பில் இருந்து விலகல்

பொறுப்பில் இருந்து விலகல்

'நமது அம்மா' நாளிதழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ஓபிஎஸ், எடப்பாடி தரப்பால் ஓரங்கட்டப்பட்டு, நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் செயல்களால் அதிருப்தி அடைந்து கடந்த ஜூன் 29ஆம் தேதி நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக் கொண்டார் மருது அழகுராஜ். அதன் பிறகு, ஓபிஎஸ் அணியில் இருந்து அவர் கடுமையாக எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாகச் சாடி வந்தார். இந்த நிலையில் இன்று அரசியலிலிருந்து விலகுவதாக மருது அழகுராஜ் அறிவித்துள்ளார்.

எடப்பாடி - கோடு - ரோடு

எடப்பாடி - கோடு - ரோடு

2011ல் எடப்பாடி பழனிசாமி முதல் முறை நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான போது, முதல் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு எடப்பாடி பழனிசாமி வாசித்த உரையே மருது அழகுராஜ் எழுதியதுதான். "எடப்பாடியில் பிறந்த எளியவனாகிய எனக்கு எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புத் தந்து எனது அரசியல் வாழ்க்கைக்கு கோடு போட்டதும் அம்மா நீங்கள் தான். இன்று நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி தமிழ்நாட்டுக்கே ரோடு போடச் சொல்லியிருப்பதும் நீங்கள் தான்" என எழுதிக் கொடுத்தார். அதையே எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் வாசித்து கைதட்டல் பெற்றார்.

முதல்வராக எடப்பாடி - முதல் அறிக்கை

முதல்வராக எடப்பாடி - முதல் அறிக்கை

மேலும், எடப்பாடி பழனிசாமி 2017ல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு 'புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதுவும் மருது அழகுராஜ் எழுதியது தான். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு அறிக்கைகளையும், உரைகளையும் எழுதிக் கொடுத்து வந்திருக்கிறார் மருது அழகுராஜ்.

ஜெயக்குமாருக்கும்

ஜெயக்குமாருக்கும்

முந்தைய அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஏற்புரையை சட்டமன்றத்தில் நிகழ்த்தினார். அந்த ஏற்புரையும் மருது அழகுராஜ் எழுதி வழங்கியது தானாம். அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் தீவிரமடைந்து நமது அம்மா ஆசிரியர் பதவியில் இருந்து விலகி, ஈபிஎஸ் தரப்பை விமர்சித்ததால் கூலிக்கு மாரடிப்பவர் மருது அழகுராஜ் என்றெல்லாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருந்து விலகல்

அரசியலில் இருந்து விலகல்

இந்நிலையில் தான் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் தற்போது அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், "எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+