அந்தர்பல்டி அடித்த கேரள அரசு..வலுக்கும் எதிர்ப்புகள்... தர்மசங்கடத்தில் தமிழக கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்..!
சென்னை: முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்டும் விவகாரத்தில் கேரள அரசு அடித்துள்ள அந்தர்பல்டியால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக நிர்வாகிகள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணைக்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என அண்மையில் அங்கு ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கோரிக்கை விடுத்தார். மேலும், மரங்களை வெட்ட கேரள அரசின் துறைகள் ஒன்றின் மீது ஒன்று கைநீட்டி இழுத்தடித்து வருவதாக பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் கேரள வனத்துறை தரப்பில் பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்டிக்கொள்ள அனுமதி தரப்பட்டது. இதையடுத்து பெருந்தன்மையுடன் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்ததோடு அது தொடர்பாக கடிதமும் அனுப்பியிருந்தார்.
இத்தகைய சூழலில் கேரள அரசு ஒரே அடியாக அந்தர்பல்டி அடித்துள்ளது. பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்ட கொடுக்கப்பட்ட அனுமதியை கேரள அரசு திரும்பப்பெற்றுக் கொண்டது. இந்த விவகாரத்தில் வனத்துறை அதிகாரிகள் அரசின் கவனத்துக்கு தெரியாமல் இந்த அனுமதியை வழங்கிவிட்டார்கள் என்றும் கேரளாவில் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு காட்டியதன் விளைவாக இந்த அனுமதியை முதல்வர் பினராயி திரும்பப்பெற்றுக் கொண்டார் எனவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
எது எப்படியோ இந்த விவகாரத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மீது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பாயத் தொடங்கியுள்ளனர். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், உள்ளிட்ட இன்னும் பலர் கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், கேரள அரசைக் கண்டித்து நாளைய தினம் அதிமுக சார்பில் 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
பேபி அணைக்கு கீழ் உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளித்து பிறகு மீண்டும் அதை திரும்பப் பெற்றுக்கொண்ட நிகழ்வால் திமுக தரப்பும் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் கூட்டணிக் கட்சியானமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல் தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications