"சிக்ஸர்".. களமாடும் ஸ்டாலின்.. சிந்தனை செல்வனுடன் ஓடோடி வந்த திருமாவளவன்..இவர்தான் "சமத்துவ நாயகர்"
திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்து பாராட்டி உள்ளார்
சென்னை: சமத்துவ நாயகனாக இருந்து தமிழக அரசை, சமூக நீதி அரசாக முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் புகழாரம் சூட்டி உள்ளார்.
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே சமூக நீதி என்ற விஷயத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.. அனைவருக்கும் அனைத்தும் என்பதே சமூக நீதி.. திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசுதான் சமூக நீதி..!
அதனால்தான், தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர்-17, இனி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கொண்டாட வேண்டும் என்று விசிக அன்றே கோரிக்கை வைத்தது.. அதன்படியே, விசிகவின் கோரிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் சமூகநீதி நாளாக அறிவித்தார்.

கடவுள் மறுப்பு
பெரியார் என்றால் கடவுள் மறுப்பு, பார்ப்பன வெறுப்பு என்றெல்லாம் அடையாளப்படுத்துவோருக்கு இடையில், அவரை சமூகநீதி மற்றும் சமத்துவத்திற்கான அடையாளமென நிலைப்படுத்துகிற தமிழக அரசின் இந்த நடவடிக்கை புரட்சிகரமானது என்று அன்றே திருமாவளவன் நெகிழ்ந்து சொன்னார்.. சமூக நீதி என்பது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமையாய்ப் பெறுகிற இட ஒதுக்கீடு மட்டுமல்ல, இது சமத்துவத்தை வென்றெடுக்கும் ஜனநாயக வழியிலான அறப்போருக்குரிய கருத்தியல் பேராயுதமாகும் என்றும் புளகாங்கிதமடைந்தார்.

சமூக நீதி அரசு
இந்நிலையில், இந்த திமுக அரசு சமூக நீதி அரசு என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாக திருமாவளவன் புகழாரம் சூட்டி உள்ளார்.. 110 விதியின் கீழ் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மேலும், அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் முன்வைத்ததுமே, அந்த கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார் ஸ்டாலின்.

சிந்தனை செல்வன்
அதேபோல, விசிக சிந்தனை செல்வன் வேண்டுகோளை ஏற்று, "சமபந்தி போஜனம்" என்பது இனி சமத்துவ விருந்து என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று நேற்று நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதல்வர் அறிவித்தார். இப்படி அடுத்தடுத்த விசிகவின் கோரிக்கைகளை ஏற்று, அதற்கான அறிவிப்புகளையும் முதல்வர் அறிவித்ததுமே, திருமாவளவன் நேரிலேயே சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் பேட்டி
பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "சமத்துவ நாயகராக இருந்து இந்த அரசை சமூக நீதி அரசாக நடத்தி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.. துணை முதலமைச்சராக இருந்த காலத்திலேயே பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு 10 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு தேர்தலை நடத்தி தலித் சமூகத்தினரை ஊராட்சி மன்ற தலைவர்களாக்கி நாற்காலியில் அமரவைத்தவர் முதல்வர் ஸ்டாலின்.

சமத்துவ பெரியார்
இந்த சாதனையை பாராட்டும் வகையில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களை "சமத்துவப் பெரியார்" என்று விசிக பாராட்டியது... இன்று முதல்வர் ஸ்டாலின் 'சமத்துவ நாயகர்' எனப் போற்றக்கூடிய வகையில் அறிவிப்புகளை செய்திருப்பது கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் மிகப்பெரும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் விசிகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களோடு சென்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications