சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 3 மணிநேரம் போராடி அனைவரையும் மீட்ட வீரர்கள்
சென்னை: சென்னை தியாகராயநகரில் வடக்கு உஸ்மான் சாலையில் ராமச்சந்திரா தெருவில் உள்ள 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் இன்று இரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ வேகமாக பரவியதால் அங்கு வசித்த 6 க்கும் மேற்பட்டவர்கள் கட்டடத்தில் சிக்கி கொண்டு அலறினர். சுமார் 3 மணிநேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
சென்னை தியாகராயநகரில் வடக்கு உஸ்மான் சாலையில் ராமசந்திரா தெரு உள்ளது. இந்த தெருவில் மங்கல வில்லா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இது மொத்தம் 3 தளங்களை கொண்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தனித்தனியாக வீடுகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் தான் அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தின் பின்பக்கத்தில் உள்ள வீட்டில் இன்று இரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. வீடு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். நிமிடத்துக்கு நிமிடம் தீயின் தாக்கம் அதிகரித்தது. 2 வது கட்டத்தில் பிடித்த தீ ஜன்னல் வழியாக 3வது தளத்துக்கும் பரவ தொடங்கியது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2வது தளம் என்பதால் தீயை அணைக்கும் பணி பெரும் சவாலாக இருந்தது. இதனால் 3 மணிநேரம் போராடி தீயை முழுமையாக தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மேலும் வீட்டில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் ராட்சத ஏணி மற்றும் ஹைலிப்ட் வாகனம் கொண்டு வரப்பட்டது. ராட்சத ஏணியின் வழியாக 2வது மாடிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் ஜன்னல் கம்பிகளை வெட்டி எடுத்து தீயை அணைத்தனர். இந்த வேளையில் கட்டடத்தில் சிக்கிய 6க்கும் மேற்பட்டோர் மொட்டைமாடிக்கு சென்றனர்.
தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகு அனைவரும் ஹைலிப்ட் வாகனம் மூலமாக கட்டடத்தில் சிக்கிய 6 பேரும் பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர். அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி போலீசார், தீயணைப்பு வீரர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ முழுமையாக அணைக்கப்பட்டு அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டால் அங்குள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.












Click it and Unblock the Notifications