சென்னையில் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பராமரிக்க.. மண்டல வாரியாக 'கோசாலை'! மேயர் அறிவிப்பு
சென்னை: சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பராமரிக்க சென்னையில் மண்டலவாரியாக கோசாலை அமைக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா அறிவித்திருக்கிறார்.
சாலையில் திரியும் மாடுகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு அதன் உரிமையாளர்களுடையது. மாநகராட்சி ஏன் மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் சிவசக்தி நகரில் மூலதன நிதியின் கீழ், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இடத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கோசாலை அமைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது,
"மனித உயிர்களை மட்டுமல்ல, சாலைகளில் சுற்றித்திரியும் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சென்னை மாநகராட்சியில் கோசாலைகள் அமைக்கப்பட இருக்கின்றன. வில்லிவாக்கத்தில் இதற்காக சுமார் அரை ஏக்கர் அளவில் நிலம் ஒதுக்கப்பட்டு, கோசாலை அமைக்கும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவது தடுக்கப்படும்.
சென்னையில் சுற்றித்திரியும் மாடுகள், எருதுகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், முதல்வர் நேரடி கவனத்தில் கோசாலை மையங்கள் அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மேயர் பிரியா பேசுகையில், "வில்லிவாக்கத்தில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் இந்த கோசாலை மையம் கட்டப்பட்டு வருகிறது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த மாடுகளை பிடித்து கோசாலையில் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. வில்லிவாக்கத்தில் அமைய உள்ள கோசாலைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இதில் 200 மாடுகள் வரை பராமரிக்க முடியும். 2 மாதங்களில் கோசாலை கட்டுமான பணிகள் முடிவடையும். மண்டல வாரியாக கோசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர வில்லிவாக்கத்தில் ரூ.53.50 கோடி மதிப்பீட்டில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதனை சென்னை பெருநகர மாநகராட்சி குழுமம் முன்னெடுத்துள்ளது. இப்பணிகள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. வில்லிவாக்கம் ஏரியில் தனியார் பங்களிப்புடன் ரூ.130 கோடியில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பூங்காவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சியில் வேறு எந்த பகுதியிலும் கண்ணாடி பூங்கா அமைக்கப்படவில்லை. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளார்.
சென்னையில் மாடுகள் பிரச்சனை மிக தீவிரமாக இருக்கிறது. ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் முட்டி பலர் உயிரிழந்திருக்கின்றனர். மாடுகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கலாம்.
ஆனால், மாநகராட்சி இந்த பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. வில்லிவாக்கத்தில் காய்கறி மார்க்கெட் பகுதி தொடங்கி எல்லா இடங்களிலும் பரவலாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதற்கு மாட்டின் உரிமையாளர்கள்தான் பொறுப்பாக முடியும். மாடு வளர்க்க ஏற்ற இடம் இல்லாமல் எதற்காக மாடுகளை வளர்க்க வேண்டும்? என்று குடியிருப்பாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோசாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒரு சாரார் வரவேற்றும், பலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கின்றனர்.
சமீப காலமாக தமிழகத்தில் மாட்டிறைச்சி பிரச்சனை பேசுபொருளாக மாறியிருக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் மாட்டுக்கறிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்று நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், அரசு மாடுகளை பராமரிக்கும் பொறுப்பை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் கோசாலை திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications