மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்.. யாருக்கு எப்போது கவுன்சிலிங்? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் நீட் அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு 6,999 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களை நிரப்பக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதற்கான தரவரிசை பட்டியலைக் கடந்த 24ஆம் தேதி அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். அரசு ஒதுக்கீடு, 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என தனித்தனியாக மூன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
அதேபோல 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சிறப்புப் பிரிவினர் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து வரும் ஜன. 30 முதல் பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு தொடங்க உள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் தரவரிசை பட்டியலை www.tnmedicalselection.net, www.tnhealth.tn.go.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த மாணவர் ஐ. சிவா என்பவர் 514 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து திருவண்ணாமலை கீழ்பெண்ணாத்தூரின் எஸ்.பிரகாஷ்ராஜ் (512 மதிப்பெண்கள்), தருமபுரி சி.சந்தானம் (483 மதிப்பெண்கள்) அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.