மெக்டனால்ஸ் நிறுவனத்தையே அசைத்து பார்த்த தக்காளி.. விலையேற்றத்தால் எடுத்த முடிவை பாருங்க
சென்னை: தக்காளியின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விலை ஏற்றத்தால் பல ஓட்டல்களிலும் தக்காளி சட்னியை கண்ணில் காண முடியவில்லை. சிறிய ஓட்டல்களில் தான் இந்த நிலை என்றால் பன்னாட்டு நிறுவனமமான மெக்டனால்ட்ஸ்-க்கும் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையான அதிகரித்துள்ளது. வழக்கமாக பருவ மழை உள்ளிட்ட காரணிகளால் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று அதிகரிப்பது வாடிக்கைதான் என்றாலும் நடப்பு ஆண்டில் கிடு கிடுவென உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து தற்போது 150 ரூபாயை கடந்துள்ளது.

குறிப்பிட்டு சொல்வது என்றால் ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்த தக்காளி ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்றும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. சில நகரங்களில் தக்காளி விலை ரூ.150 ஐ தாண்டி விற்பனையாகிறது. தக்காளி விலையேற்றம் காரணமாக பல ஓட்டல்களில் தக்காளி சட்னியை காண முடியவில்லை.
வீடுகளில் கூட தக்காளி சாதத்திற்கு எல்லாம் டாட்டா காட்டிவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு கிச்சனில் தக்காளி குறைந்து விட்டது. கிலோ கணக்கில் வாங்கியவர்கள் கூட தற்போது கால் கிலோ, அரைகிலோவுடன் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் சிறிய ஒட்டல்களில் தான் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னிக்கு பதிலாக புதினா சட்னி, தேங்காய் சட்னியுடன் நிறுத்தி விடுகிறார்கள் என்றால் பெரிய ஓட்டல்களிலும் இப்படித்தான் நிலமை உள்ளது.
சரி சிறிய ஓட்டல்களில் தான் இது நிலைமை என்றால் பிரபல பன்னாட்டு உணவகமான மெக்டானால்ட்ஸும் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்படாமல் இல்லை. அதாவது தக்காளி விலையேற்றத்தால் போதுமான அளவில் கிடைப்பது இல்லை என்றும் தரமான தக்காளிகள் கிடைக்கவில்லை என்பதால் தங்கள் உணவு மெனுவில் தக்காளி இடம் பெறாது என்று அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக மெக்டனால்ட்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:-
தரமான உணவு பொருட்களை கொண்டு சிறந்த உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். நாங்கள் கடுமையான முயற்சி மேற்கொண்ட போதும் தரமான தக்காளிகளை பெற முடியவில்லை. சந்தைக்கு வரும் தக்காளியின் தரத்தின் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கள் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் தக்காளி இடம் பெறாது என்று தெரிவித்துள்ளது. மெக்டனால்ட்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை நெட்டிசன்கள் பலரும் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
உலகளவில் பிரபலமான பர்கர் நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் அமெரிக்காவில் சிகாகோ நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் உணவகங்கள் உள்ளன. ஏன் சென்னையில் கூட பல இடங்களிலும் மெக்டனால்ட்ஸ் நிறுவனத்தின் கடைகளை காண முடிகிறது. இவ்வளவு பெரிய உணவக குழுமமான மெக்டனால்ட்ஸ் நிறுவனத்தையே தக்காளி விலையேற்றம் விட்டு வைக்கவில்லையா என்ற ரீதியில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications