சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக
சென்னை: சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம். திமுக எங்களுக்கு கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை, சின்னம் தொடர்பாக எங்களுக்கு வருத்தம் உள்ளது என மதிமுக தெரிவித்துள்ளது.
வேட்பாளர் பட்டியல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து அரசியல் கட்சிகள் பரபரப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிடம் மதிமுக நிர்வாகிகள் தங்கள் விருப்பத் தொகுதிகள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ், "எங்களுக்குக் கிடைத்த நான்கு தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானதும், கட்சித் தலைமை அறிவிக்கும். நாங்கள் கேட்ட சில தொகுதிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. ஆனால், மதிமுகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதி ஒதுக்கீடு இல்லை என்பது வருத்தமே. எங்கள் நிலைமை 'சிரித்துக்கொண்டே அழுகிறோம்' என்பதுதான்" எனக் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவின் சொந்தச் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 28 தொகுதிகள், மதிமுக - 4 தொகுதிகள், மமக- 2 தொகுதிகள், ஐயூஎம்எல்- 2 தொகுதிகள், கொமதேக- 2 தொகுதிகள், கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள், மார்க்சிஸ்ட்- 5 தொகுதிகள், விசிக- 8 தொகுதிகள், தேமுதிக- 10 தொகுதிகள் உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டுள்ளன. அது போல் சின்ன கட்சிகளுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வந்த தேமுதிகவுக்கு கூட இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் தங்களுக்கு கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காததும், தனிச் சின்னத்தை இழப்பதும் தான் மதிமுகவின் நிரந்தர அதிருப்திக்கு அடிப்படை.












Click it and Unblock the Notifications