வைகோவிடம் மீண்டும் அதே கம்பீரம்...! 21 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஆய்வு
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்துவந்த நிலையில், அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டார்.
கம்பீர தோற்றத்துடன், கர்ஜனை சத்தத்துடன் உலா வந்த வைகோவுக்கு கடந்த மாதம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் அவர். பிறகு உடல்நலம் ஓரளவு தேறியதை அடுத்து வீட்டிற்கு சென்றார் வைகோ.

வைகோவுக்கு இரண்டு மாத காலம் கண்டிப்பாக ஓய்வு தேவை என்றும், அழுத்தம் ஏற்படக்கூடாது எனவும் மருத்துவர்கள் கண்டிஷன் போட்டனர். அப்போது, மருத்துவர்களிடம் எனக்கு எதற்கு ஓய்வு என சிரித்த வைகோ வழக்கமான பணிகளை தொடங்க நினைத்தார். ஆனால் குடும்பத்தினரும், மூத்த நிர்வாகிகளும் விடுவதாக இல்லை. அவரை ஓய்வு எடுக்குமாறு வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவிடவில்லை.
இந்நிலையில் நாளை மறுதினம் (செப்.15-ம் தேதி) அண்ணா 111-வது பிறந்தநாள் விழா மாநாடு மதிமுக சார்பில் சென்னையில் நடத்தப்படுகிறது. அதற்கான பணிகள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெறுகின்றன. அதனை பார்வையிட வந்த வைகோ, செய்து முடிக்கப்பட்ட பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஜீவன் உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவருக்கே உரிய கர்ஜிக்கும் குரலில் அங்கிருந்த பணியாளர்களுக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பாக அவருடன் இருந்த முக்கிய நிர்வாகியிடம் நாம் பேசியபோது, அண்ணன் அதே கம்பீரத்துடன் வந்துவிட்டார். இது போதும் எங்களுக்கு. அவரை பார்க்காமல் பல தொண்டர்கள் தவித்துவிட்டனர் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications