வீட்டில் தவறி விழுந்த வைகோ! தோள்பட்டையில் எலும்பு முறிவு.. அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் இருந்தபோது தவறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார் என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும் வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பதாக இருந்தது. ஆனால், இன்று வைகோ திருமண விழாவிற்கு வரவில்லை. வைகோவிற்கு பதிலாக அவரது மகனும் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

இந்த நிலையில் வைகோ வீட்டில் தவறி விழுந்ததாகவும், இதில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் உடனடியாக சென்னை சென்று விட்டதாகவும் அவரது மகன் துரை வைகோ கூறியுள்ளார். மேலும் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:-
மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக திருமண விழாவில் பங்கேற்று பேசும் போது, வைகோ திருமண விழாவில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து பேசினார். துரை வைகோ கூறியதாவது:- கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து திருமண விழாவில் பங்கேற்க வைகோ புறப்பட்டு கொண்டு இருந்த போது திடீரென கீழே தவறி விழுந்து விட்டதாகவும் இதனால் தோள்பட்டையில் சிராய்ப்பு ஏற்பட்டு வைகோவிற்கு காயம் ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அங்கிருந்து அவசர அவசரமாக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் தான் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை" என்று கூறினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காயமடைந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக அரசியலில் மிக மூத்த தலைவரும் மதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான வைகோ கீழே விழுந்ததில் காயம் அடைந்ததாகவும் சிகிச்சைக்காக சென்னை சென்று இருப்பதாகவும் வெளியாகியிருக்கும் தகவல் மதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ராஜ்யசபா எம்பியாகவும் இருக்கும் வைகோ (வயது 80) லோக்சபா தேர்தலில் தீவிர பிரசாரம் செய்து வந்தார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் துரை வைகோ போட்டியிட்டுள்ளார்.
லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வைகோ பிரசாரம் மேற்கொண்டார். சென்னையில் தொடங்கி திருச்சி, தூத்துக்குடி, தென்காசி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை என பல்வேறு தொகுதிகளில் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications