சென்னை பேரணி மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் -வைகோ
சென்னை: குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பேரணி முழு வெற்றி பெற்றுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றது மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் என அவர் கூறினார்.
இதனிடையே செய்தியாளர் ஒருவர் ஹெச்.ராஜா பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய போது, நல்ல விஷயம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அவரை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என வைகோ கோபம் அடைந்தார்.

வைகோ பேட்டி
குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் நடத்திய பிரமாண்ட பேரணி முழு வெற்றி பெற்றதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். லட்சகணக்கானோர் இந்த சட்டத்துக்கு எதிராக சீறி எழுந்து இந்த பேரணியில் தன்னார்வமாக கலந்துகொண்டார்கள் எனக் கூறினார்.

குலை நடுக்கம்
சென்னையில் லட்சகணக்கில் திரண்ட கூட்டத்தை கண்டு மத்திய அரசுக்கு குலை நடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்காத வகையில் கூட்டம் திரண்டிருந்ததாகவும் வைகோ கூறினார். முட்டாள்தனமாக முடிவெடுத்துவிட்டோம் என மத்திய அரசு நிச்சயம் நினைக்கும் என வைகோ தெரிவித்தார்.

உணர்ந்திருக்கும்
குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் குளவிக் கூட்டில் மத்திய அரசு கை வைத்து விட்டது என்றும், இப்போது வழிதெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்தச் சட்டத்தால் லட்சகணக்கானோர் சீறி எழுந்துள்ளதாக கூறினார்.

நல்ல பதில்
இதனிடையே மாணவர்களை வைகோ பகடைகாயாக பயன்படுத்த பார்க்கிறார் என ஹெச்.ராஜா கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, நல்ல விஷயம் தொடர்பாக பதில் அளித்து வருகிறேன், அவரை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கோபம் அடைந்தார் வைகோ.












Click it and Unblock the Notifications