செண்டிமெண்டை தூள் தூளாக உடைத்த வைகோ... கேலி -கிண்டல்களை புறந்தள்ளி வெற்றிவாகை சூடிய மதிமுக..!
சென்னை: மதிமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில்லை என்ற புரட்டுவாதத்தை தூள் தூளாக உடைத்தெறிந்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ.
சமூக வலைதளங்களில் தன்னை பற்றி வெளிவரும் கேலி-கிண்டல்களை பொருட்படுத்தாமல், தொடர்ந்து அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் அவர் மதிமுக சார்பில் 4 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றிருக்கிறார்.
ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் செல்கின்றனர்.

வெற்றிமுகம்
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலின் போதும் வைகோ எடுத்த முடிவு அவருக்கும் அவரது கட்சிக்கும் பாதகமாகவே அமைந்து வந்தது. ஒன்று அவர் கூட்டணியில் இணைகின்ற கட்சி தோல்வியை தழுவிவிடும் இல்லையென்றால் மதிமுக வேட்பாளர்கள் தோல்வியை சந்திப்பார்கள். சரியான நேரத்தில் தவறான முடிவு எடுக்கிறார் வைகோ என அவர் மீது கோபித்துக் கொண்டு மதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் ஏராளம்.

ஓயமாட்டேன்
இந்நிலையில் மதிமுக இடம்பெறும் கூட்டணி ஆட்சிக்கு வந்ததில்லை எனக் கூறி சிலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு விமர்சித்து வந்தனர். போற்றுவோர் போற்றட்டும் புழுதுவாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப அரசியலில் தனது உழைப்பை செலுத்தி வந்தார் வைகோ. மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓயமாட்டேன் என சபதம் எடுக்காத குறையாக பணியாற்றினார்.

4 தொகுதிகளில்
இதனால் கூட்டணி விவகாரத்தில் கூட சீட் பங்கீட்டில் சற்று தாராளம் காட்டினார் வைகோ. காலத்தின் தேவை கருதி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் இசைவு தெரிவித்து அவ்வாறே தனது கட்சி வேட்பாளர்களையும் போட்டியிட வைத்தார். இந்நிலையில், மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் சாத்தூர், அரியலூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு என 4 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மதுராந்தகம் மற்றும் பல்லடத்தில் மட்டும் அக்கட்சி தோல்வியடைந்தது.

உற்சாகம்
கடந்த 2006-2011-க்கு பிறகு இப்போது தான் மதிமுக சட்டமன்றம் செல்கிறது. இடைப்பட்ட 2011 தேர்தலின் போது தேர்தலையே புறக்கணித்திருந்தார் வைகோ. இதேபோல் 2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டார். இதனால் மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் சோர்வடைந்திருந்த நிலையில், இப்போது அவர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில் வெற்றி மதிமுக வசம் தேடி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications