மதிமுகவினருக்கு சலிக்காமல் பிரியாணி விருந்து! உறவு கூறி அழைத்த துரை வைகோ! யார் இந்த முராத் புகாரி?
சென்னை: மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரியின் மரணச் செய்தி வைகோவை மனதளவில் பெரிதாக பாதித்துள்ளது.
இவ்வளவு இளம் வயதில் மறைந்துவிட்டாரே என நேற்றிலிருந்து தனது குடும்ப உறுப்பினர்களிடமும், கட்சிக்காரர்களிடமும் ஆற்றாமையில் தழுதழுத்திருக்கிறார் வைகோ.
இதனிடையே புகாரியை மாமா என்று வாஞ்சையோடு அழைத்து வந்த துரை வைகோ, அவரது மரணத்தை தன்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார்.

யார் புகாரி?
மதிமுகவில் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்த முராத் புகாரியை பொறுத்தவரை அவர் ஒரு தொழிலதிபரும் கூட. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் புகாரி பிரியாணி குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவர். 50 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஹோட்டலை சென்னையில் நடத்தி வந்தவர். சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் கணக்கு வழக்கு பார்க்காமல் பக்கெட் பக்கெட்டாக பிரியாணி கொடுத்து அனுப்பக் கூடியவர் புகாரி.

சிரித்த முகம்
எல்லாவற்றுக்கும் மேலாக வைகோவாலும், துரை வைகோவாலும் 'வாங்க மாமா' என உரிமையுடன் அன்பொழுக அழைக்கப்பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் புகாரி. இஸ்லாமிய அமைப்புகளின் நிறுவனர்களுக்கும் வைகோவுக்கும் உறவுப்பாலமாக திகழ்ந்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரக் கூடியவர். கடந்த 2016ஆம் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடும் டஃப் கொடுத்தவர்.

ரமலான் மாதம்
ஆண்டுதோறும் ரமலான் மாதம் வந்துவிட்டால் போதும், இஸ்லாமிய இயக்கங்களே நடத்திடாத வகையில் மிக பிரம்மாண்டமாக இஃப்தார் விழாவை நடத்தி வைகோவை பெருமைப்படுத்த தவறாதவர். ஒரு சில நேரங்களில் கட்சி நிர்வாகிகளிடம் உணர்ச்சிவசப்பட்டு வைகோ சில கடுஞ்சொற்களை கூறுவார். ஆனால் புகாரியிடம் அது போல் வைகோ எந்நாளும் நடந்துகொண்டதில்லை. காரணம் வைகோவின் உள்ளுணர்வு அறிந்து கட்சியில் காரியம் ஆற்றியவர் புகாரி.

மாமா புகாரி
முராத் புகாரி மறைவு பற்றி துரை வைகோ விடுத்துள்ள இரங்கலில், ''மாமா முராத் புகாரி, உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றேன். இளம் வயதில் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. கழகத்தின் சார்பில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.'' என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications