ராஜ்யசபா எம்.பி.யாகும் நேரத்தில் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் தீர்ப்பு வருதே... பதறும் மதிமுக!
Recommended Video
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்கில் ஜூலை 5-ல் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ராஜ்யசபா எம்.பியாகி மீண்டும் வைகோ பரபரப்பாக பேசப்படலாம் என்கிற சூழலில் தீர்ப்பு என்ன மாதிரி இருக்குமோ என பதற்றத்தில் இருக்கிறது மதிமுக.
2009-ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் முடிவுக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டுகிறேன் என்கிற நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பங்கேற்று பேசினார்.
அக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வைகோ பேசியதாக தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ஜூலை 5- ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

ராஜ்யசபாவில் மீண்டும் வைகோ
இவ்வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்துதான் மதிமுக நிர்வாகிகள் பெரும் பதற்றத்தில் இருக்கின்றனர். திமுகவுடனான கூட்டணியில் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் வைகோ, ராஜ்யசபா செல்ல இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் எதிர்காலம்?
இந்த சூழலில் வைகோவுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால் அவரது அரசியல் எதிர்காலத்துக்கே முற்றுப்புள்ளியானதாகிவிடுமே என்பதுதான் மதிமுகவினரின் பதற்றத்துக்கு காரணம். மேலும் 2 முக்கிய நிகழ்வுகளயும் சுட்டிக்காட்டி மதிமுக தொண்டர்கள் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர்.

லாலு கட்சியின் கதி
பீகாரில் தனிப்பெரும் தலைவராக கோலோச்சி வந்தவர் லாலு பிரசாத் யாதவ். அவரை ஊழல் வழக்கில் சிறையிலடைத்ததன் மூலம் அக்கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவுக்கு லோக்சபா தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

சசிகலாவுக்கு நடந்தது..
தமிழகத்தில் முதல்வர் பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் சசிகலாவின் நாற்காலி கனவு தகர்ந்தது. இந்த நிகழ்வுகளைப் போல வைகோ வழக்கில் விரும்பாத ஏதேனும் ஒன்று நிகழ்ந்துவிடுமோ என்பதே மதிமுகவினரின் அச்சம்.












Click it and Unblock the Notifications