8 தொகுதியும் தனிச்சின்னமும்... திமுக உடன் மல்லுக்கு நிற்கும் மதிமுக - வைகோவின் அரசியல் பயணம்
திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் மதிமுக இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. வைகோ சற்றே தளர்ந்துதான் போயிருக்கிறார்.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் 8 தொகுதிகளை கேட்கிறது மதிமுக, அதே நேரத்தில் திமுக 5 தொகுதிகளைத் தருவோம் என்றும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்துவதாகவும் தெரிகிறது. ஆனால் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று உறுதியாக கூறி வருகிறார் வைகோ.
தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு இருபெரும் கட்சிகளான திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை உறுதியாக எதையும் செய்ய முடியாது. காரணம் வைகோ எடுக்கும் திடீர் முடிவுகள் அப்படிப்பட்டது. வைகோவின் அரசியல் பயணத்தையும் அவர் கடந்து வந்த பாதையையும் பார்க்கலாம்.
வைகோவும் திமுகவும்
திமுகவின் கொள்கை, அறிஞர் அண்ணாவின் பேச்சு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வைகோ 1964ஆம் ஆண்டு அரசியல் வாழ்வில் வைகோ அடியெடுத்து வைத்தார். அண்ணாவின் அன்புத் தம்பியாகவும், கருணாநிதியின் செல்லப் பிள்ளையாகவும் திமுகவில் வைகோ வலம் வந்த வைகோ, 20 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்தார். கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்த அதே நேரத்தில் போட்டியும் உருவானது. ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து வெளியேறினார்.
வைகோ அரசியல் பயணம்
அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி ஆகிய முழக்கங்களோடு கடந்த 1994, மே 6ஆம் தேதி உருவானது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். இளைஞர்கள் மத்தியில் வைகோவிற்கு தனி ஆதரவு உருவானது. படிப்படியாக அது தேய்ந்து மறைந்தே விட்டது. தமிழக அரசியலில் 55 ஆண்டுகாலம் பயணித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கியது முதல் தனித்து போட்டியிட்டும், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்தித்துள்ளார்.
வைகோவின் முதல் தோல்வி
திமுகவில் இருந்து பிரிந்துவந்த வைகோ, 1996ஆம் ஆண்டு தான் சந்தித்த முதல் தேர்தலில் தோல்வியடைந்தார். தான் போட்டியிட்ட விளாத்திகுளம், சிவகாசி என இரண்டு தொகுதியிலும் வைகோ தோல்வியை சந்தித்தார்.
விலகிய வைகோ ஜெயித்த அதிமுக
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக உடன் தொகுதி உடன்பாடு எட்டபடாததால் , திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட மதிமுக தோல்வியடைந்தது. திமுக அந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வைகோ திமுக கூட்டணி விட்டு வெளியேறி வாக்குகளை பிரித்ததும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஜெயலலிதா உடன் வைகோ கூட்டணி
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி சேர்ந்தார். அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு சென்றனர். இந்தத் தேர்தலில், வாசுதேவ நல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.
தேர்தல் போட்டியில் இருந்து விலகிய வைகோ
கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் இருந்த அவர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட சிக்கலால் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறினார். ஏற்பட்ட சட்டசபை தேர்தலை புறக்கணித்து மதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். அப்போது முதலே கட்சி பலவீனப்பட ஆரம்பித்தது. முக்கிய தலைவர்கள் மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
திமுக உடன் கூட்டணி
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியை தொடங்கி மூன்றாவது அணி அமைத்தார். அந்த கூட்டணி தோல்வியடையவே 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக உடன் கரம் கோர்த்தார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கப் போகிறார் வைகோ. இந்த தேர்தலில் மதிமுகவிற்கு உள்ள ஒரு சிக்கல் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கூறப்படுவதுதான்.
எத்தனை தொகுதிகளில் போட்டி
திமுக கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனிதநேய மக்கள் கட்சியுடனும் உடன்படிக்கை ஏற்பட்டுள்ள நிலையில் விசிக, மதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தையில் திமுக சின்னத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட மதிமுக வலியுறுத்தப்பட்டதாகவும், அதற்கு மதிமுக தரப்பு சம்மதிக்கவில்லை எனவும் தகவல் வெளியானது.
தனிச்சின்னம்தான் வைகோ உறுதி
பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறியிருந்தார். மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மதிமுக அலுவலகத்தில் வைகோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, ஏஆர்ஆர் சீனிவாசன், ராஜா அருள்மொழி ஆகியோர் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தனர். இப்பேச்சுவார்த்தையில் திமுக சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வைகோ பேட்டி
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, தற்போது முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்துமுடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை திமுகவிடமிருந்து அழைப்பு வரும்போது செல்வோம். எந்த சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவோம் என இப்போதைக்குக் கூற முடியாது என்று முதலில் கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று சொன்னார்.
மதிமுக கேட்கும் தொகுதிகள்
திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று வைகோ தளர்வுடனே கூறியிருக்கிறார். மதிமுக போட்டியிடுவதற்காக திருப்போரூர், சங்கரன்கோயில், வாசுதேவநல்லூர், கிணத்துகடவு, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட தொகுதிகளை குறி வைத்து பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஆனால் கேட்ட தொகுதிகளை திமுக விட்டுத்தருமா? தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதிக்குமா என்பது இரு தினங்களில் தெரிந்து விடும். லோக்சபா தேர்தலில் திமுக உடன் இணைந்து தேர்தலை சந்தித்தாலும் இந்த தேர்தலில் திமுக உடன் முதல் முறையாக சட்டசபைத் தேர்தலை சந்திக்கப் போகிறது மதிமுக அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.