மதிமுகவின் எதிர்காலமே இந்த தேர்தலில் இருக்கு.. 4 தொகுதிகளின் கள நிலவரம் சொல்வது என்ன?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 4 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மதுரை தெற்கு, சீர்காழி, மயிலாடுதுறை மற்றும் மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகள்ல் போட்டியிடுகிறது. இந்த 4 தொகுதிகளில் மதிமுக வெல்லுமா என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முதலில் உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் மதிமுகவின் எதிர்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக அமைந்துள்ளது.

அந்த வகையில் 4 தொகுதிகளிலும் மதிமுக வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் மதிமுகவை எதிர்த்து பாஜக தரப்பில் ராம ஸ்ரீனிவாசன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் இருப்பதால், பாஜக இங்கு களமிறங்கி இருக்கிறது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ராம ஸ்ரீனிவாசன் இந்த தொகுதியில் பணியாற்றி வந்தார். அதேபோல் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது அவருக்கு சாதகமாக இருக்கிறது. அதேபோல் தவெக வேட்பாளர் கோபிசன் மற்றும் நாதக சுமதி ஆகியோர் புதிய வாக்காளர்களை கவர்ந்துள்ளனர். இதனால் மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன் முந்துவதாகவே தெரிகிறது.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி தொகுதியில் மதிமுக சார்பாக செந்தில் செல்வன் களமிறக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக நேரடியாக முன்னாள் எம்எல்ஏ சக்தி, நாதக சார்பாக சுபாஷ், தவெக சார்பாக கோபிநாத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இதில் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் தொகுதிக்குள் நன்கு அறிமுகமானவர். ஆனால் தனிப்பட்ட செல்வாக்கு பெரிதாக மதிமுகவுக்கு இல்லை.
அதிமுகவில் உட்கட்சி மோதல் தீவிரமாக இருந்து வரும் சூழலில், அதிமுக வேட்பாளர்களுக்கு பலரும் பணியாற்றாமல் அமைதியாகிவிட்டனர். இதனால் உதயசூரியன் சின்னம் மற்றும் கூட்டணி கட்சியினரின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் செந்தில் செல்வன் வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியை பொறுத்தவரை மதிமுக சார்பாக செந்தில்நாதன் களமிறக்கப்பட்டுள்ளார். மறுபக்கம் அதிமுக கூட்டணியில் மீண்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டு, சிட்டிங் எம்எல்ஏ சரஸ்வதி மருமகள் கிருத்திகா சிவக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த தொகுதியில் கிருத்திகா சிவக்குமார் பணியாற்றி வருகிறார்.
கடந்த தேர்தலில் பாஜக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. இதனால் திமுக கூட்டணி கட்சியினர் தீவிரமாக பணியாற்றினால், கிருத்திகா சிவக்குமாருக்கு சவால் அளிக்கலாம். கடைசி நேர பரப்புரையில் மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிரம் காட்டி வருகிறார். இருந்தாலும் மொடக்குறிச்சி தொகுதியில் தற்போது பாஜகவே முந்துவதாக பார்க்கப்படுகிறது.
கடையநல்லூர் தொகுதியை மதிமுக வேட்பாளர் ராசேந்திரன் களமிறங்கி இருக்கிறார். அதிமுக சார்பாக சிட்டிங் எம்எல்ஏ கிருஷ்ண முரளி களமிறங்கி இருக்கிறார். இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ வென்றதே கிடையாது. இந்த தொகுதியில் ஏராளமான அடிப்படை வசதிகளே செய்யப்படாமல் இருக்கிறது. இருந்தாலும் களத்தில் அதிமுக சவால் அளிக்கிறது. தற்போதைய சூழலில் கடையநல்லூர் தொகுதியில் உதயசூரியன் உதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications