மொளச்சு மூணு இலயே விடல.. ஆமா இதற்கு அர்த்தம் தெரியுமா? முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை நண்பாஸ்
சென்னை: "மொளச்சு மூணு இலயே விடல " என்பது தமிழில் ஒரு பழமொழி. இதன் நேரடி அர்த்தம், "முளைத்து மூன்று இலைகளைக் கூட விடவில்லை" என்பதாகும். அதாவது, ஒரு செடி முளைத்து மூன்று இலைகள் விடுவதற்குள் எவ்வளவு சிறியதாக இருக்குமோ, அந்த நிலையைக் குறிக்கிறது.
இந்த பழமொழி, அனுபவமில்லாத அல்லது குறைந்த அனுபவம் உள்ள ஒருவர், தங்களைப் பற்றி அதிகமாகப் பேசும் போது அல்லது தங்களை பெரியவர்களாக நினைத்துக்கொண்டு செயல்படும் போது பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு குழந்தை அல்லது இளைஞன், முதிர்ச்சியற்ற நிலையில், பெரியவர்களைப் போல் பேசும் போது அல்லது செயல்படும் போது, "அவன் இன்னும் 'மொளச்சு மூணு எலையே விடல', அதுக்குள்ள இப்படி பேசுறான்/செயல்படுறான்" என்று கூறுவார்கள்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன் இதுகுறித்து அளித்துள்ள விளக்கம்: சில இருவிதையிலைத் தாவரங்கள் முளைக்கும்போது இரண்டு இலைகள் மட்டுமே வெளிப்படும். அவை நன்கு வேரூன்றி, அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்ல சிறிது காலம் தேவைப்படும். அதேபோல், சில மனிதர்கள் சிறு வயதிலேயே பெரியவர்களைப் போல் பேசுவார்கள். பெரியவர்களிடமே பயமில்லாமல், யோசிக்காமல் தங்கள் மேதாவித்தனத்தை வெளிப்படுத்துவார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடிந்துகொள்ளும் விதமாக, "முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள ஏண்டா இப்படிப் பேசுறே?" என்று கூறுவார்கள். அதாவது, ஒன்றும் அறியாத நிலையில், எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுவதைக் குறிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாவரம் இரு இலையை விடும்போது வலு இல்லாமல் வளரும் நிலையில் இருக்கும். மூன்றாவது இலை வரும்போது நல்ல பெரிய செடியாகிவிடும் தன்மை இருவிதையிலைத் தாவரங்களின் இயல்பாகும். அதைத்தான் இப்படி ஒப்பீடு செய்துள்ளனர் நமது முன்னோர்கள்.












Click it and Unblock the Notifications