மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான்.. கொரோனாவை ஒழிக்க முடியும்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை: மக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகத்தின் செயல்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின், அனைவரும் சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் வரும மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து அனைத்து ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுகிறது. இருப்பினும், மக்களிடையே கொரோனா பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு ஊடகங்களிடம் உள்ளது.
எனவே, மக்களின் உயிர் காக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் முழு செய்திகளை, மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், முன்களப் பணியாளர்களாக இருக்கும் ஊடகவியலாளர்களின் பங்கு முக்கியமானது.
அரசுக்கு ஊடகவியலாளர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். அரசு வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் கொரோனாவை ஒழிக்க முடியும்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications