விஷமுறிவு மருந்தை சொன்னால்.. அல்சர் மருந்து இருப்பு உள்ளதாக அமைச்சர் சொல்கிறார்.. எடப்பாடி அட்டாக்
சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் பற்றி பேச நேற்று போல் இன்றும் அனுமதிக்கவில்லை. இதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். தட்டுப்பாடு என்ற சொன்ன மருந்து வேறு, மா சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு. விஷ சாராய முறிவுக்கான மருந்தை நான் சொன்னேன், ஆனால் அவர் அல்சர் மருந்தை சொல்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக சட்டசபை இன்று 3வது நாளாக கூடியது. இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் வருகை தந்தனர். அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு முதலில் கேள்வி நேரம் என்றும் அதன் பிறகு கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் பற்றி பேச அனுமதிக்கப்படும் என்றார்.

எடப்பாடி பேட்டி: ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி சாராய விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் பேச அனுமதி கொடுக்கவில்லை. இதுவரை எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது போன்ற விவரங்களை கேட்டு பெறுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் இன்றைக்கும் பேரவை தலைவர் அனுமதி கொடுக்கவில்லை.
நான் கூறியது வேறு மருந்து: எங்களுக்கு கிடைத்த தகவல் படி, 183 பேர் சிகிச்சையில் இருந்ததாகவும், அதில் 55 பேர் உயிரிழந்ததாகவும் செய்திகள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. இந்த அரசு மெத்தனப்போக்குடன் செயல்பட்டு வருகிறது. கொஞ்சம் வேகமாக துரிதமாக செயல்பட்டு இருந்தால் நிறைய உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். 300 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் இருக்கிறது. அதன் அருகே தான் நீதிமன்றம் இருக்கிறது.
நேற்று மா சுப்பிரமணியன் ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்துவிட்டு பேட்டி கொடுக்கிறார். ஓம்பிரசோல் மாத்திரை நிறைய கையிருப்பு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி வேண்டும் என்றே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் என்றும் கூறுகிறார். நான் விஷ சாராய முறிவுக்கான மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது என்று தான் தெரிவித்தேன். ஆனால் மா சுப்பிரமணியன் அல்சர் மருந்திற்கான ஓம்பிரசோல் மருந்து கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கிறார்.
பெயரை மாற்றி சொல்கிறார்: நான் சொன்ன மருந்தின் பெயர் fomepizole injection. ஆனால் அவர் சொல்கிறது omeprazole capsule. அல்சர் மாத்திரை பெயரை அவர் சொல்கிறார். நான் கள்ளச்சாராய விஷ முறிவிற்காக செலுத்தப்படுகின்ற இன்ஜெக்சன். ஆனால் அவர் பெயரை மாற்றி சொல்கிறார். இது எங்கும் கிடைக்கவில்லை.
இதைவிட முக்கிய பிரச்சினை என்ன: கிட்டத்தட்ட 183 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று சொன்னால் அங்கு எந்த அளவுக்கு விஷ சாராய விற்பனை நடந்து இருக்கும் என்று பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லை இந்த அளவுக்கு கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருப்பது எப்படி போலீசுக்கு தெரியாமல் இருந்திருக்கும். அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. எனவே சிபிசிஐடி போலீஸ் விசாரணை செய்தால் இதில் உண்மை வெளி வராது. எனவே சிபிஐ விசாரணை வேண்டும்.
நாட்டு மக்களை காக்க தான் சட்டசபை. இதைவிட முக்கிய பிரச்சினை என்ன இருக்கிறது? இதனை பேசுவதற்கு ஏன் அனுமதி கொடுக்க மாட்டுகிறாங்க.. நேற்று எங்களை வெளியேற்றி விட்டு பிறகு கேள்வி நேரம் முடிந்த பிறகு அதிமுக எம்எல்ஏக்களை பேச அனுமதி கொடுக்கிறாங்க. நாங்கள் அங்கு இருக்கும்போது பேச அனுமதி கொடுக்காமல் எங்களை வெளியேற்றி விட்டு அதற்கு பிறகு ஏன் அனுமதி கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மா சுப்பிரமணியன் பேச்சு: நேற்று அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில், "எதிர்க்கட்சி தலைவர் நேற்று அங்கு வந்து பார்வையிட்டு சென்றது நல்ல விஷயம் தான். பொறுப்போடு செய்யும் விஷயம் வரவேற்க தக்கது. ஆனால் போகும் இடத்தில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அதாவது சொல்வார்களே, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல இருந்தது.
ஏனென்றால் அந்த மருத்துவமனையில் ஓம்பிரசோல் என்ற மாத்திரை தட்டுப்பாடாக உள்ளது என்று சொல்லி சென்றிருக்கிறார். அவர் வந்து சென்ற பிறகு தான் நானும் அங்கு சென்றேன். அப்போது எடப்பாடி இப்படி சொன்னதாக என்னிடம் சொன்னார்கள். இதையடுத்து உடனடியாக இதுகுறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டோம். அப்போது ஓம்பிரசோல் மாத்திரைகள் 4 கோடியே 4 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் இப்படி சொல்லியிருக்கிறார். இது எதிர்க்கட்ச்சி தலைவருக்கு அழகானதா?.. என்பதை நீங்களே கூறுங்கள்" என்று பேசியிருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி மா சுப்பிரமணியன் பேசியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications