இன்னும் தடுப்பூசி போட்டுக்கலையா? சென்னையில் நாளை 2000 இடங்களில் தடுப்பூசி முகாம்! யூஸ் பண்ணிக்கங்க!
சென்னை: சென்னையில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம், 2 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக சுகாதாரத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சிறப்பு முகாம்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் இதுவரை 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற 36-வது மெகா தடுப்பூசி முகாம்களில் 42,61,685 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 15-ம் தேதி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 55,52,580 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 48,39,813 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
சென்னையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில், 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் 2,26,792 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,81,340 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. இதேபோல், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களில் 1,33,655 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 1,01,010 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இலவச பூஸ்டர் தடுப்பூசி
மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்திருந்த நிலையில், இதற்கான காலக்கெடு வரும் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கெடு முடிவடைவதற்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், தகுதி உடைய அனைவரும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தடுப்பூசி முகாம்
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் நாளை 37-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஒரு வார்டுக்கு 10 முகாம்கள் என சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 2 ஆயிரம் இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. சென்னையில் 42,35,939 பேர் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள தகுதி உடையவர்கள். இவர்களில் 6,04,042 பேருக்கு இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசிகளை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாதவர்கள்
மேலும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு, 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும், நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமுக்குச் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications