முக்கிய அரசியல்வாதியின் மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ்.. திருமணத்தில் ராகுல், ஸ்டாலின் பங்கேற்பு!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான திருநாவுக்கரசர் வீட்டுக்கு மருமகள் ஆகிறார் நடிகை மேகா ஆகாஷ். வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், நடிகை மேகா ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வில் பல முன்னணி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனராம்.
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். ரஜினிகாந்த்தின் 'பேட்ட' படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த மேகா ஆகாஷ் கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் மேகா ஆகாஷ். தனது காதல் கணவராகப் போகும் நபரின் பெயர் சாய் விஷ்ணு என குறிப்பிட்டு அவரையும் அறிமுகப்படுத்தி இருந்தார் மேகா ஆகாஷ். மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
மேகா ஆகாஷின் வருங்கால கணவர் சாய் விஷ்ணு யார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி அரசியல் தலைவரின் வாரிசு என்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய செய்தி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவராகவும், மத்திய, மாநில அமைச்சராகப் பொறுப்புகளை வகித்துள்ளவருமான காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு.
திருநாவுக்கரசரின் இரண்டாவது மகன் சாய் விஷ்ணு, சென்னை லயோலா கல்லூரியில் பி. காம் முடித்ததோடு நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குநர் பா. ரஞ்சித்திடம் காலா, கபாலி போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
மேகா ஆகாஷுக்கு சாய் விஷ்ணுவை 9 வருடங்களாகத் தெரியுமாம். கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலித்து வருகிறார்களாம். இந்நிலையில் தான் பெற்றோர் சம்மதத்தோடு இருவரும் மண வாழ்வில் இணைய இருக்கிறார்கள்.

சென்னையில் சாய் விஷ்ணு - மேகா ஆகாஷ் ஜோடியின் நிச்சயதார்த்தம் அண்மையில் எளிமையாக நடந்து முடிந்த நிலையில், வருகிற செப்டம்பர் 14 ஆம் தேதி இவர்களது திருமண வரவேற்பும், 15 ஆம் தேதி திருமணமும் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் திருமணம் நடைபெற இருக்கிறது.
திருமண பத்திரிகையை அரசியல் கட்சி தலைவர்களுக்கு கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார் திருநாவுக்கரசர். அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கி திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முன்னணி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் திருநாவுக்கரசர்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்பட தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலருக்கும், டாப் திரையுலக பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் திருநாவுக்கரசர் அழைப்பு விடுத்துள்ளார்.
தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது மகனின் திருமண அழைப்பிதழை பதிவிட்டுள்ள திருநாவுக்கரசர், இதனையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருக என்று அழைப்பு விடுத்துள்ளார். மேகா ஆகாஷ் சாய் விஷ்ணு திருமணத்திற்கு திரை உலக பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அதிக அளவில் நேரில் வந்து வாழ்த்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications